Thursday, January 21, 2016

முன்பெல்லாம் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் வினோத்திடம் கேட்பேன். அவன் சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதால் முத்துவிற்கு ஃபோன் செய்தேன்.
“டேய் முத்து, பாரதி மணி [S K S மணி] -ன்னு ஒரு மேடை நடிகர் சென்னையில இருக்காரு… பாபாஅந்நியன் போன்ற வர்த்தகப் படங்களிலும், பாரதி போன்ற நிறைய விருதுப் படங்களிலும் நடித்தவர். அவருடைய மொபைல் நம்பர் கெடச்சிது. அதான் அவரைப் பார்க்க போகலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற…”

அவனுக்கு சினிமா ஆர்வம் அதிகம் என்பதால். “சரி மாமா, போய்த் தொலைங்க” என்று கூறினான்.  விசேஷம் என்னவென்றால் அவருக்கு வயது 72. ஆகச்சிறந்த விசேஷம் என்னவென்றால் அவருடைய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ புத்தகம் தான். 

தன்னுடைய ஐம்பது வருட டெல்லி வாழ்க்கையையும், தான் சந்தித்த சிறந்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் கட்டுரையாக்கியுள்ளார்.”ரஜினியுடன் நடிப்பவர், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா போன்றவர்களுடன் மேடை நாடகத்திற்கு விவாதித்தவர், அமரர் நேருவுக்கு தோள் கொடுத்து ஒன்றாக நடந்தவர், அருந்ததி ராய், ராஜீவ் காந்தி போன்றவர்களுடன் கை குலுக்கியவர், க நா சு -வுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தவர்” நமக்கு எங்கு நேரம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு அவருடைய மொபைலில் தொடர்புகொண்டேன். 

முடுக்கிவிடப்பட்ட எண்கள் எதிரே ஒலிக்கிறது. காலை 9 மணி என்பதால் நீண்ட நேரமாக ஒலிக்கிறது. எதிர் முனையில் மொபைலை எடுத்தவர் “ஹலோ” என்றார். 

நானும் வணக்கம் சொல்லிவிட்டு, “ஐயா,பாரதி மணி இருக்கிறார்களா?” என்றேன்.

”நான் தான் பேசறேன். சொல்லுங்க…”

”நான் கிருஷ்ண பிரபு பேசறேன். உங்களை இன்று பார்க்க வரலாம் என்றிருக்கிறேன். வீட்டில் இருப்பீர்களா மணிஜி?” என்று கேட்டேன்.

”ஓ நீங்களா!… அந்தப் பதிவர் தானே. என்னை பாக்கறதுக்கு எதுக்கய்யா Appointment ? தாராளமா வாரும்”

”என்ன சொல்றீங்க மணிஜி… எவ்வளோ பெரிய மேடை நடிகர் நீங்க!. எதாச்சும் ஒத்திகை அல்லது ஷூட்டிங் இருக்கும் இல்ல…” என்றேன்.

”அதெல்லாம் ஒண்ணும்  இல்லை. சும்மா தான் இருக்கேன் நீங்க தாராளமா வாங்க.”

”உங்களுடைய முகவரி தெரியாது… அதனால கொஞ்சம் சொல்றீங்களா நான் எழுதிக்கிறேன்?” என்றேன்.

”எதுக்கு எழுதிக்கிட்டு. நான் SMSஅனுப்பிடறேன்…” என்று சொல்லி முடித்தார். 

அடுத்த இரண்டு நிமிடங்களில் எனக்கான குறுந்தகவல் வந்து சேர்ந்தது.பனி பொழியவேண்டிய காலத்தில் லேசான தூறல் தூறிக் கொண்டிருந்தது. என்னுடைய சாதாரண இயல்பும் மாறி லேசான பதற்றம் இருந்தது. 

“சாய் நகர், மூன்றாவது பிரதான சாலை, விருகம்பாக்கம்” – இதற்கு கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்வதுதான் சரியென்று அங்கு சென்று பிறகு விருகம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.
ஓட்டுனரின் அருகில் சென்று ‘சாய் நகர் வந்தால் தெரியப்படுத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு அவரின் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். மண்டையை மண்டையை ஆட்டியவர் தூங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். கோயம்பேடு மார்கெட் நெருக்கமாக வரவும் நான் விழித்துக் கொண்டேன்.
“இதைத் தாண்டியா ‘சாய் நகர்’ இருக்கிறது?” என்றேன்.
“அடடே… மூணு ஸ்டாப்பிங் முன்னாடியே சாய் நகர் போயிடுச்சே… என்னப்பா இப்போ வந்து கேக்குற…”
திருவிழாவில் உறவினர்களைத் தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருக்கும் குழந்தையைப் பார்ப்பது போல் இரக்கமுடன் என்னைப் பார்த்தார். இதெல்லாம் என் வாழ்க்கையில் சகஜம் என்பது போல் அவரை நோக்கி சமாதானப் புன்னகையை வீசினேன். . முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்ற கொள்கையை உடையதால் மூன்று நிறுத்தங்கள் பின்னோக்கி சென்றேன். ( கோயம்பேட்டிலிருந்து நடந்தே சென்றிருக்கலாம். கோவில் சுற்றுவது போல் பாரதி மணியின் வீட்டை மையமாக வைத்து சுற்ற வேண்டும் என்றிருந்தால் யாரால் மாற்றமுடியும்.)
வழியில் விசாரித்துக் கொண்டே அவருடைய அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினேன். 
கதவு திறக்கப்பட்டு என்னை எதிர் கொண்டவர்  “நீங்க தானே கிருஷ்ண பிரபு, Come in… Come in…” என்று உள்ளேஅழைத்தார். 
நான் வரவேற்பறையிலேயே நின்றுவிட்டேன். அவருடைய படுக்கை அறையிலிருந்து மீண்டும் குரல் கேட்டது “Come in… Come in… Take you space here”
சங்கோஜத்துடன் உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டேன். அவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. புகையிலையை லேசாகத் தூவி புகையிழுக்கும் பைப்பை உதட்டில் திணித்து பற்ற வைத்துக்கொண்டே என்னைப் பற்றி விசாரித்தார். சொந்தக் கதை, வந்த கதையையெல்லாம் சொல்லிவிட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். இடையே புகை பிடிக்கறது சிரமமா இருந்தா சொல்லிடுங்க என்றார்.
அவருடைய டெல்லி வாழ்க்கையையும், நண்பர்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிகம்போத் காட், பூர்ணம் விஸ்வநாதன், இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா, அருந்ததி ராய், ரிலையன்ஸ் பாலு போன்ற பல நபர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தயங்கி தயங்கி, “நான் சினிமாவையோ டிவியையோ அவ்வளவாகப் பார்ப்பதில்லை” என்றேன்.
No problem… நானும் பார்ப்பதில்லை. பழி வாங்கறத தவிர வேற என்ன இருக்கு அதுல… அப்படியே பார்த்தாலும் “animal channels” -தான் பார்க்கிறேன் என்றார்.
ராஜ் டிவியில் எஸ். ரா  திரைக்கதை எழுதிய ஒரு நாடகத்தில் நடித்ததைப் பற்றி கேட்டேன்.
ரஜினி கூட அந்த சீரியலை விரும்பிப் பார்த்தாராம். எங்கயாவது வெளிய போயிட்டாலும் சௌந்தர்யாவிடம் சொல்லி ரெக்கார்ட் பண்ணச் சொல்லுவாராம். சில வெளியூர்களுக்கு ஷூட்டிங் போகும் போது பெண்கள் வந்து அந்த வயசான கேரக்டரில் நடித்ததைச் சொல்லி பாராட்டுவாங்க. எனக்கே ஆச்சர்யமா இருந்தது என்று கூறினார். எது எப்படி இருந்தாலும் ஒரு மேடை நாடகத்தில் நடித்துவிட்டு கீழிறங்கும் போது, ‘நல்லா நடிச்சீங்க’ என்று சொல்லி கை குளுக்குவாங்க பாருங்க… அந்த ‘கிக்கே’ தனி என்று கூறினார்.
மூன்று படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அவர் மட்டும் தனியாக இருக்கவும், அவருடைய குடும்பத்தைப் பற்றி எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தவித்தேன். நீண்ட நேரம் தொண்டையிலேயே இருந்ததால் பேச்சோடு பேச்சாக அந்தக் கேள்வி வெளியே வந்துவிட்டது.
நீங்கள் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது…?
ஓ அதுவா … என்னோட ரெண்டு பெண்களும் Phd முடிச்சிட்டு நல்ல வேலைல இருக்காங்க. பெரியவ பெங்களூரில் தான் இருக்கா. அங்க இருக்கப்போ வாஸந்தி, பாவண்ணன், சொல்வனம் (இணையத்தளம்) நிறுவனர் என சில நண்பர்களைப் பார்ப்பதுண்டு. வீட்டுக்கு வந்து பேசிட்டுப் போவாங்க. அவ கூப்பிடுராளேன்னு போனா Return Ticket கெடைக்கலன்னு சொல்லி படுத்தி எடுத்துட்ரா. இங்க இருக்க உங்களுக்கு என்னப்பா கொறச்சல், எதுக்கு தனியா இருந்து கஷ்டப்படணும்ன்னு சொல்றா. எனக்கு என்னமோ இங்கதான் சரியா வருது. இப்போல்லாம் புறப்படுற தேதி, கெளம்பற தேதி-ன்னு ரெண்டு டிக்கெட்டும் இருந்தாதான் போறது.
சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்குமே… யார் சமைக்கிறார்கள்…?
இதோ பாருங்க, எனக்கு நாக்கு நாலு முழம். ருசியா சாப்பிடனும். அதனால வார நாட்களில் சமையல் செய்யறவங்க வந்து சமைப்பாங்க. அவங்களுக்கு எதுஎது எப்படி இருக்கனும்னு சொல்ல சொல்ல அவங்க சமைப்பாங்க. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நான் சமைப்பேன். இன்னைக்குக் கூட என்னோட சமையல் தான் என்று எழுந்து போனார்.
வரும்போது ஒரு தட்டில் வத்தல், வாழைப்பழம், கைக்குத்தல் அரிசி சாதம் (தேங்காய்த் துருவலுடன்) எடுத்துக் கொண்டு வந்தார். அவர்தான் சாப்பிடப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் என்னிடம் நீட்டினார். க நா சுவுக்கு என்னுடைய சமையல் என்றால் அலாதிப்பிரியம் தெரியுமோ என்றார். அதைப் பற்றி ஒரு கட்டுரைஅமுதசுரபி தீபாவளிமலரில் வந்திருக்கே பார்த்தீர்களா? என்று என்னிடம் நீட்டினார்.
நான் அசை போட்டுக் கொண்டே புத்தகத்தை வாங்கினேன். ஒரு கையில் தட்டுடனும், ஒரு கையில் கட்டுரையுடனும் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நீங்க சாப்பிட்ட பிறகே படியுங்கள் என்ற சலுகையை வழங்கினார். சமையலைப் பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். அதில் வறுத்த கொட்டையை அரைத்து தயார் செய்யும் காபியும் அடக்கம். அதை அவருடைய நண்பர்கள் பலரும் விரும்புவார்களாம். இந்த மாதிரி வித்யாசமான விஷயங்கள் எனக்கும் பிடிக்கும் அதற்கு இன்னொரு நாள் வருவோம் என்று நினைத்துக் கொண்டேன்.
நீங்க கொடுத்த dish ருசியாவும் வித்தியாசமாகவும் இருந்தது…
ஒரு நண்பர் நீண்ட நாட்களுக்கு முன்பு ‘சரவணா பவன் அண்ணாச்சி இதைதான் தினமும் சாப்பிடுகிறார்’ என்று அறிமுகம் செய்து வைத்தார். அதிலிருந்து நானும் இரண்டு வருடமாக இதைதான் சாப்பிடுகிறேன். என்ன ஒண்ணு… அவர மாதிரி ஜெயிலுக்கு போக வேண்டியதுதான் பாக்கி என்றதும் பற்கள் தெரிய சிரித்தேன்.
இந்த பைப்ல எப்போதிலிருந்து சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சீங்க?

முதல்ல ஆறு மாதத்திற்கு ஒரு முறை சிகரெட் பிடிப்போம். பிறகு தினம் மூன்றானது. அதன் பிறகு தினமும் முப்பது என்றானது. இதைப் பிடிக்கறதால அதைக் கணிசமா குறைச்சிட்டேன்.   பல வருஷங்களுக்கு முன்னாடி நெருங்கிய நண்பர் பிறந்த நாள் பரிசா கொடுத்தான். ரொம்ப நாளா உபயோகிக்காம வச்சிருந்தேன். இப்போ என் கூடவே இருக்குது என்றார். 

நான் அவருடைய மேசையைப் பார்த்தேன். அங்கு 6 சிகரெட் பைப்கள் இருந்தன.நீங்கள் பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி எழுதிய கட்டுரையை விரும்பி வாசித்தேன். (அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?)

ஓ என்னுடைய புத்தகம் படித்தீர்களா?

இல்லை இல்லை. உயிர்மை – இணையத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. உங்களைப் பார்க்க வந்ததே புத்தகம் வாங்கிக் கொள்ளத்தான். என்றதும் அவரிடம் இருந்த ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ புத்தகத்தின் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்து ஆசீர்வதித்தார். 

புத்தகத்தில் என்னைப் பற்றி எழுதியவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.   நான் எழுந்து நின்று அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டேன்.

ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை, ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவங்கள், இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அவரது தனித்துவமான மொழிநடையில் வாசகர்களை பெரிதும் உற்சாகம் கொள்ள செய்தன. இவை ஒரு தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் சரித்திரமாகவும் இருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.

0 comments:

Post a Comment