Monday, January 8, 2018

மணி சார்!.... அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-----இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்...



-----------------------------------------------------இரா.குமரகுருபரன்--------------------------

எவ்வளவு அருமையான நாள் ஜனவரி ஏழு !...பாரதி மணி சாரை விட, அவரது ரசிகர்களுக்கும்........எனக்கும் !  
அவசர அவசரமாக, அலுவலகத்தில் பணியை முடிக்காமலேயே,மவுண்ட் ரோட்டில் வேலை இருப்பதாகச் சொல்லி, அனுமதியுடன் ஏழு மணிக்குக் கிளம்பினேன். பேருந்து 'ஜாமில்' வழுக்கி வந்து புக்-பாயிண்ட் சேர நேரமாகி விட்டது. உள்ளே நுழைந்து புத்தகத்தை காசுகொடுத்து வாங்கிவிட்டு அரங்கில் நுழையும்போது,லெனின் அவர்கள் "புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினீ ர்களா?" என்று மைக்கில் அவையோரை 'மிரட்டிக்' கொண்டிருந்தார்!...புத்தகத்துடன் நுழைந்த என்னைப்பலரும் கவுரவமாகப் பார்த்ததாக தோன்றிற்று!
"பாரதிக்கு அப்பா" என்று தேவி தியேட்டர் உள்ளரங்கில் பாரதி மணி சார் அவர்களை திரு லெனின் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய "பாரதி" திரைப்பட 'ப்ரிவியு' நிகழ்வு நேற்று நடந்தது போல இருக்கிறது!...அதற்குள் 14 ஆண்டுகள் ஓடிவிட்டதா! இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள் இயக்கிய "பாரதி" திரைப்படத்தில் இளையராஜா அவர்களின் பின்னணி இசை அமைதி காத்து நடிகர் சாரங்கபாணி போன்ற வசனத்தைத் தெளிவாக உச்சரித்த சப்தம்!...மராட்டி ஷாயாஜி ஷிந்தேயைப் போன்றே, யார் இந்த மணி என்று எண்ண வைத்துவிட்டது! தேசிய நாடகப் பள்ளி ஆளு(மை) என்று அவர் பற்றி ஒரு 'பிட்'டுப் போட்டுவிட்ட பிறகு என்ன கேள்வி!..ஹபீப் தன்வீர் போன்ற நாடகாசிரியர்கள் நினைவுக்கு வந்தார்கள் அப்போது!
என்ன ஆளுமை! நான் அன்றிலிருந்து அவரை சென்னையின் ஒவ்வொரு கூட்டத்தில் பார்க்கும்போதும் அலட்டலில்லாமல் அரங்கில் எங்கேயோ அமர்ந்திருப்பார்!... பல பிரபலங்கள் அவர் அமர்ந்த இடம் தேடிவந்து பேசிச் செல்வார்கள்!
பேஸ்புக்கில் அவரது நட்புக் கிடைத்தபின்தான் அவரது ஆளுமையின் முழு விஸ்தீரணமும் தெரிந்தது. ரயில்தடம் பதிக்காத அந்தக்காலத்து  நாகர்கோவில்-தில்லிப்பயணம் பற்றிய அவரது கட்டுரை ஒன்று போதும்... 
மெட்றிக் ( சின்ன டைவர்ஷன் : நாகர்கோவில்காரர்கள் கூகிளில் அதிகம் இருப்பார்கள் போல...மெட்ரிக் என்று அடித்தால் மெற்றிக் என்று வருகிறது!) வருவதற்கு முன்னர் ரூபா-.அணா -பைசா என்ற நாணயக் கணக்கு இருந்த காலம்.நல்லவேளையாக நான் 'மூணாப்பு' போகும்போதே ஒழித்துக் கட்டினார்கள்...மாகாணி(1/16), அரைக்கால்(1/8) வாய்ப்பாடு சரியாக ஒப்பிக்காத என் சகவயது மாணவனை வயிற்றைஜவ்வு மிட்டாயாகப் பிடித்து இழுத்து துவைத்து விளாசிய கழுகுமலை பாபநாச வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.... அதிருக்கட்டும்.
* * *
அடுத்து சாஹித்திய அகாதெமியின் க.நா.சு. அவர்களின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில்அவரது ஹாஸ்ய உணர்வு வெளிப்பட கட்டுரை வாசித்தார். தோழர் ச.தமிழ்செல்வனும் இதில் கலந்துகொண்டு க.நா.சு. பற்றிப் பாராட்டிப் பதிவு செய்தார். ("க.நா.சு.வும் எங்களுக்குத் தாத்தாதான்...எல்லாத் தமிழ்த் தாத்தா 'சட்டே'ல இருந்தும் பேரப்பிள்ளைங்க நாங்க உரிமையோட சில்லரைய எடுத்துச் செலவழிப்போம்ல!...")
க.நா.சு. அவர்களின் மருமகன்தான் பாரதி மணி! ...
* * *
அவர் மனதில் தில்லியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சஞ்சலம் மனதினுள் இருந்துகொண்டே இருப்பதை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். இவரை சென்னை பண்பாட்டுத் தளம் சரியாகப் பயன்படுத்தவில்லையே என்கிற ஆதங்கம் எனக்குள் உண்டு. எழும்பூர் ம்யூசியம் தியேட்டரில் அவர் இயக்கி நடித்த சுஜாதாவின் "கடவுள் வந்தார்" நாடக அரங்கேற்றத்தின்போது நானும் இயக்குனர் சுகா அவர்களும் அருகருகே அமர்ந்து ரசித்து கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். 'பாட்டையா பாட்டையா' என்று அடிக்கடி பகடி பேசும் சுகா உள்ளுக்குள் நெகிழ்வதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் "அவரு தன்னோட சொந்தக்காசைச் செலவழிச்சு நாடகம் போடறாரு...அதுக்கேத்த ரெஸ்பான்ஸ் கெடைய்க்குமான்னு தெரீல" ன்னு சொன்னபோது மனசு உருகித்தான் போனது.(இவ்வளவு பாசத்தை மனசுக்குள் அடக்கிக் கொண்டு வெளியில் அவரை வம்புக்கு இழுக்கும் சுகா பற்றி பிரமிப்பு ஏற்பட்டது!)
சரி. நிகழ்ச்சி பற்றி ...

லெனின் சார் மைக் பிடித்த இடத்தையே தாளமாக்கி கலக்கிக் கொண்டிருந்தார்...கவிஞர் ரவி சுப்பிரமணியன் மாதிரி இவரும் இசைஇடை வைத்த உரை நிகழ்த்தத் தொடங்கியிருப்பது  வித்தியாசமாகத்தான் இருக்கிறது! அவரது தனி ஸ்டைலில் அந்தக்காலம்... பாரதி மணி என்று 'அப்ளாஸ்' தட்டிக்கொண்டு அசத்தினார். புத்தகம் ஒசீக்கு வாங்கிப்படித்தல் பற்றி அவர் சொன்ன போது கோவில்பட்டி சரஸ்வதி தியேட்டர் அருகிலுள்ள மைதானத்தில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் "இரத்தக் கண்ணீர்" நாடகம் பார்க்க கழுகுமலையிலிருந்து வந்தது நினைவுக்கு வந்தது. முன்னாலே உட்கார்ந்த பல நபர்கள் ஓசி டிக்கட்டாக இருப்பதாக உணர்வு வந்து நடிகவேள் சகட்டுமேனிக்குத் திட்டியது ஞாபகம் வந்தது.
திரைப்பட இயக்குநர் சுகா வராது போனதால் அவர் வாழ்த்துச் செய்தியை வம்சி-பவா வாசித்தார்.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தனக்கும் மணி சாருக்குமான நட்பை குணாம்சங்களை பாஸ்வல்-டாக்டர் சாமுவல் ஜான்சன் உறவைப்போன்றது என்று சிலாகித்தார். முனைவர் என்பதால் அவரது கட்டுரைகளில் பல ஆழமாக இவரால் அலசப்பட்டது. நிகழ்வுக்கான தேதியில் தமிழச்சி இருக்கவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திய மணி சாரை வம்சி-ஷைலஜா முதலிலேயே குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தான் அவரைக்கண்ட நாள் முதலான தொடர்பு, திரைப்படத்தில் அவரது பாத்திரப்படைப்பு, மணி அவர்களின் பண்பு நலன்கள் குறித்து விவரணையாகப் பேசினார்.மிக நுட்பமாக கட்டுரைகள் பற்றியும், அதன் வரலாற்றுச் சிறப்பையும் பதிவு செய்தார்.
(மணி சார் எல்லாவற்றையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு பரபரப்பு தென்பட்டதை உணர்ந்தேன்...எல்லாம் என்னவாக இருக்கப் போகிறது- "பாட்டையா பாட்டையா" ன்னு அடிக்கடி கூப்புட்டு என்ன பிரயோஜனம், இந்தப் 'பாவிமக்கா' (சுகா: "பேதீல போவான்" ன்னு நெல்லை பாஷைல திட்டலாமே பாட்டையா ?
மணி: பேராண்டி ஒன்ன அப்படித் திட்டுவானே'டே ..
சுகா: அதானே பாத்தேன்.
மணி: அதவிட மோசமா யோசிச்சிட்டு இருக்கேன்'டே )
வந்து தொலைச்சிருக்கலாமுல்லா ..பெருசா வாழ்த்துச் செய்தி அனுப்பித் தொலைச்சிட்டாருன்னு வீம்பு தென்பட்டது.

"ப்ரண்ட்லைன்" ஆங்கில இதழ் ஆசிரியர் விஜயஷங்கர், -ராஜீவ் மேனோனுக்குப் பதிலாக வரவழைக்கப்பட்டு,நூலைப் பெற்றுக் கொண்டார். தூரத்தில் இருந்து பார்த்த மணி அவர்களின் நட்பு சமீபத்தில்தான் கிடைத்ததில் உண்டான குற்ற உணர்வு அவர் பேச்சில் பிரதிபலித்தது. (நண்பர் விஜயஷங்கர் கேரளா பூர்விகமாயினும், அவரது அத்தான்-சகோதரியின் கணவர் -மதுரை சந்திரசேகரனுக்கு மாமாதான் நெல்லைச்சீமை புதுமைப்பித்தன் என்பதை மணி சாரிடம் பிறகு சொல்ல வேண்டும். ஆனந்தப்படுவார் )

சேலத்தில் வேறொரு துக்க வீட்டுக்குச் சென்று விட்டு நேராக சென்னைக்கு அரங்கத்துக்கே வந்த இலக்கியப் புரவலர் கல்லூரித் தாளாளர் எஸ்கேபி. கருணா மணி அவர்களின் ஆழ்ந்த நாடக ஈடுபாடு குறித்த தமது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக மணி சார் ஏற்புரையில், " என் மக ஷைலஜா"ன்னு வாஞ்சையாக த்தொடங்க ஷைலஜாவோ 'இப்படித்தான் பாலு மகேந்திரா சாரும் சொல்லீட்டுப் 'போயிட்டாரு'ன்னு' மனசுக்குள் கலங்கியதும் எனக்குத் தெரிந்தது...
" எல்லாரும் பொய் சொன்னாங்க...எல்லாம் உயர்வு நவிற்சி" என்று 'ஒரேபோடாகப்' போட்டு விட்டு இந்திரா காந்தி போன்ற பிரமுகர்களோடு பகிர்ந்து கொண்ட தனது கையெழுத்துக் 'கோல்மால்'களை விலாவாரியாக சுவாரஸ்யத்துடன் விவரித்தார்.

"எனக்கு இப்ப வயசு 77 ஆறது...சோர்வு எனக்கில்லை...இது மாதிரி சப்போர்ட் இருந்தா -மேடை ஸ்டேண்டை தொட்டுக் காட்டியபடி (அது கூட உருவகம்தான் )-மணிக்கணக்கில் பேசுவேன். நடிப்பேன்...வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அனுபவிச்சாச்சு...மூணு மணி நேரப் பரீக்ஷையை இரண்டு மணிக்குள்ள எழுதி முடிச்சாச்சு. பாஸாயிடுவேன்...ஆனாலும் பேப்பரை ஹால் சூபர்வைசரிடம் கொடுக்க ஒரு மணி நேரம் காத்துக் கெடக்கணுமாம்!..." என்று கம்பீரமாக காலனுக்கு சவால்விட்ட மார்க்கண்டேயராக மேடையை விட்டிறங்கினார்!
-அதுதான் பாரதி மணி !.......'காலனை காலால் எட்டி உதைக்க' அழைத்த 'பாரதியின் தந்தை' ஆயிற்றே!  அவர் பேசப்பேச எனக்குள் ஷேக்ஸ்பியர் "ஹேம்லட்" நாடகத்தில் Grave-digger கதாபாத்திரம் வாழ்க்கை-பிறப்பு-இறப்பு பற்றி தத்துவம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தப்பாத்திரத்தில் இவர் நடித்தால் எப்படி இருக்கும், என்பதை நினைத்தும் பார்த்தேன் !
* * *
இந்த மனிதருக்குள் புதைந்து கிடக்கும் அனுபவங்களை வெளி உலகுக்கு யாராவது உணர்த்தினால் நல்லது என்று சில காலம் முன்பு நினைத்தேன்.
அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்து விட்டது வம்சி!... .
(இன்னும் வீடியோப்பதிவைப்பார்க்கவில்லை...சீனு ராமசாமி அவர்கள் பேச்சைக் கேட்க விடுபட்டது.)

பாரதி மணி அவர்களின் நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய வரலாற்றுப்பாதையில் எழுத்தாளர்கள்-வாசகர்களின் சுமைதாங்கிக் கல்... அந்த மனுஷரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள்!...கூர்மையான அவதானிப்பு, அன்பு, நேசம், பாசம், நக்கல், எளிமை...எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் வானளாவப் பறந்துகொண்டிருந்தாலும், கால்கள் தரையில் பாவி நிற்பதுதான் !...

மணி சார் அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்.......

//2015 ஜனவர் 7-ம் தேதி நடந்த ”புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” புத்தக வெளியீட்டுவிழா பற்றி...//
இரா. குமரகுருபரன்.