Tuesday, November 21, 2017


“இனிமெ உங்களை கூப்பிடமாட்டாங்களா.......அப்பா?” என திடீரென என் மகள் அனுஷா கேட்டாள். ஒருகணம் எதற்கு இந்தக்கேள்வி என திகைத்து, மறுகணமே புரிந்துகொண்டு, “அரசியலைத்தவிர மற்ற எல்லாத்துறையிலும்........ஆர்ட் அன் கல்ச்சருக்கும் வயது வரம்பு உண்டும்மா!” என்று பதிலளித்தேன். நேற்று பிற்பகல் IFFI-2017 Goa International Film Festival துவக்கவிழாவின் நேரலை ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவள் கேட்ட திடீர்க்கேள்வி!

நான் கடைசியாக பங்குபெற்றது 2010 கோவா திரைப்படவிழாவில் Indian Panorama-வுக்கு ஒரு ஜூரியாக பணியாற்றியது தான்! 25 நாட்கள் தில்லியில் தங்கியிருந்து, இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியப்படங்களிலிருந்து, 26 சிறந்தபடங்களை Goa Indian Panorama-வுக்கு தேர்ந்தெடுப்பது.

அறுபதுகளில் sub-titles வராத காலங்களில் தொடர்ச்சியாக பத்தாண்டுகளுக்கும் மேல் தில்லியில் ஒரு Translator-ஆக கலந்துகொண்டு தினமும் நாலைந்து படங்களாக தேசிய/உலகசினிமாப்படங்கள் பார்த்து அனுபவித்த கணங்கள் மனத்திரையில் வந்துபோயின!

இனி என்னால் செய்யமுடிந்தது நல்ல நினைவுகளை அசை போடுவது தான்!

Photographs below:
1. With Co-Juries in front of Siri Fort Auditorium, New Delhi.
2. Actor Jayaram presenting mementoes to Panorama Juries.
3. Relaxing with other Juries at Goa Film Festival.
4. With Dir. Sivan (Dir. Santhosh Sivan's father) waiting for the
    Car at the Hotel.


PS::::The gentleman in the extreme left (near me) in the first photo is Mr. Bhupendra Kainthalia, at present Director of FTTI, Pune. Anupam Kher was appointed as Chairman of FTTI recently.

Wednesday, November 8, 2017













போனவருடம் இதே நாளில் -- நவம்பர் 8, 2016 -- பெங்களூர் சக்ரா மருத்துவமனையில் முதுகுத்தண்டு ஆபரேஷனுக்காக --  Laperoscopic Decompression Surgery of L4, L5 S6 of Spine -- மாலை ஏழரை மணிக்கு அட்மிட் ஆனேன். அடுத்தநாள் காலை 10.30-க்குத்தான் ஆபரேஷன். பொழுதுபோகாமல் என் அறையிலிருந்த டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென இரவு எட்டுமணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி இன்றிலிருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுகின்றனஎன்ற அறிவிப்பை திடீரென அறிவித்தார்.

கள்ளத்தனமான லக்ஷ்மி கடாட்சம்எனக்கு எப்போதுமே இருந்ததில்லையாதலால் மடியில் கனமில்லாமல் இனி கள்ளப்பணம் கொட்டிக்கிடக்கும் பணமுதலைகளும், அரசியல்வாதிகளும் செத்தாண்டா...சேகரு!என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவர் பேச்சைக்கேட்டேன்.

ஆனால் என்னைப்பார்க்க வந்த டாக்டர்கள் முகங்களில் பேயறைந்த சாயல் தெளிவாகவே தென்பட்டது. ஐயோ! எப்படி சமாளிக்கப்போகிறோம்!என்ற பீதி தெரிந்தது. மருத்துவமனையெங்கும் அன்றிரவு அதைப்பற்றியே பேச்சு! பல டாக்டர்கள் மோடியை அப்போது நேரில் பார்த்தால், விஷ ஊசி போட்டு உடனே  கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களெனத் தோன்றியது!

என் மனக்கணக்கில் என்வசம் கையிலிருந்த (அப்போது செல்லாத) ரூ.500/ரூ.1000 நோட்டுக்களின் கூட்டுத்தொகை பத்தாயிரத்தை தாண்டாததால், படுத்தவுடன் தூக்கம் வந்தது!

அடுத்தநாள் காலை என்னை ஆபரேஷனுக்கு தயார் செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு வீல் ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போகப்பட்டேன். சினிமாவில் வருவது மாதிரி சிவப்பு விளக்கில் பெரிதாக OPERATION THEATRE என்று எழுதியிருந்தது. ஆனால் என் உறவினர்கள் கூட ஓடி வரவில்லை. என் மகள் மட்டும் இருந்தாள்.

உள்ளே போனவுடன் அனெஸ்தீஷியா டாக்டர்களிடம் Demonetization பற்றிய ஜோக்குகளை உதிர்த்துக்கொண்டிருந்தேன். It was a major surgery;  முதுகின் கீழ்ப்பகுதியில் ஆறு அங்குலத்துக்கு கீறுவதற்கு பதிலாக இரு துளைகள் போட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மூலம் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் எலும்புகளை உடைத்து சரிசெய்வது இந்த ஆபரேஷன்.  ஜெனரல் அனெஸ்தீஷியா ஏற்றியபிறகு, டாக்டர் என்னிடம், ‘இந்த ஆபரேஷன் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா?’ என்றுகேட்டார். நான் அவரிடம், அதைப்பற்றி நீங்களல்லவா கவலைப்படவேண்டும்?....என்னைப்பொறுத்தவரை, I am in your safe hands! Why should I worry?' என்று பதிலளித்தேன்.

அப்போது கொடுத்த மயக்கமருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதைக்கணிக்க ஒரு டாக்டர், “By the way, you didn't tell me your full name? உங்க பேரென்ன?” என்று கேட்டதற்கு, முகத்தில் போட்டிருந்த சுவாசக்குழாயை கையால் விலக்கி, “My name is Narendra Modi!' என்று பதிலளித்தேன். திடுக்கிட்ட டாக்டர்கள் அனைவரும் ஒரே குரலில், “WHAT?" என்றார்கள். திரும்பவும் மாஸ்க்கை கையால் விலக்கிப்பிடித்துக்கொண்டு, “I am Narendra Damodhardar Modi!......The Prime Minister of India!" என்று ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டு சுவாசக்குழாயை மறுபடியும் மாட்டிக்கொண்டேன். பக்கத்திலிருந்த ஒரு மலையாளி நர்ஸ் சத்தமாக, “எடீ ஸூஸம்மே! ஓடி வரூ! இயாள் எந்து பறயுந்நு...கேக்கு? “ என்று அலறினாள். அது தான் நான் கடைசியாகக்கேட்டது! பிறகு நினைவில்லை!

இந்தசம்பவம் நான் கோமாவில் இருக்கும்போதே ஆஸ்பத்திரி முழுவதும், பின்னர் பெங்களூர் டாக்டர்களுக்கிடையிலும் வாட்ஸப்பில்  வைரலாக பரவியது. ஆபரேஷன் முடிந்து நான் ICU-வுக்கு மாறினதும், ஜூனியர் டாக்டர்கள் ஓரிருவராக என்னை வந்து பார்த்துவிட்டு, நமுட்டுச்சிரிப்புடன் "Oh! You are Narendra Modi!" என்று விசாரித்துவிட்டுப்போனார்கள்! அவர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு எண்பது வயது நோயாளி டாக்டர், எனக்கு ஆபரேஷன் நல்லபடியா ஆகுமா இல்லே செத்திருவேனா?, நான் வரும் டோக்யோ ஒலிம்பிக்ஸில் ஓடமுடியுமா?' என்றெல்லாம் பயத்தோடு கேள்விகள் கேட்காமல் திமிர்த்தனமாக என் பெயர் மோடி என்று பதில் சொன்னது தான்!

அடுத்தநாள் காலையிலேயே அறையில் குளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ருத்ரப்பா “You're Surgeons' delight. ப்ரெஷர், டயபெட்டீஸ், போன்ற எந்த உபாதைகளும் இல்லாத நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வது எங்களுக்கு வீட்டில் விளையும் பிஞ்சு காய்கறிகளை வைத்து சுவையாக சமையல் செய்வதைப்போல. உங்களிடமிருந்து கால் அவுன்ஸ் ரத்தம் கூட வீணாகவில்லை. I will remember this surgery for a long time!" என்று பாராட்டினார். அன்று மதியமே வீட்டுக்கு விரட்டி விட்டார்!

ஆஸ்பத்திரியில் என்னை வாஞ்சையுடன் கவனித்துக்கொண்ட நர்ஸ் ஸூஸம்மா! அந்தம்மா பிரியும்போது சொன்ன வார்த்தைகள்:::”அச்சோ! நிங்ஙளெப்பொலெ ஒரு ஆளெ இதுவரெ கண்டிட்டில்ல!”






Wednesday, November 1, 2017




 புகழ்பெற்றிருக்கும் பாரதி மணி மிகச்சிறந்த சமையல்கலைஞரும் கூட. வாழ்வில் எனக்கு எல்லாமும் கிடைத்துவிட்டது என்று பெரும்நிம்மதியுடன் வாழும் இந்த 77 வயது இளைஞரை அந்திமழை இதழுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். அவரே செய்த பூசணிக்காய் அல்வாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னவர், தன் சமையல், சாப்பாட்டு நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தார்:

 சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். வாரமொருமுறையாவது பண்ணித்தரச்சொல்லி தொந்தரவு செய்வேன். ‘நீ சுண்டெலியா பொறந்திருக்கவேண்டியவண்டா!’ என்று அலுத்துக்கொண்டே எண்ணெய்ச்சட்டி ஏற்றுவாள். அதைச் செய்வதிலும் நான் திறமை வாய்ந்தவன். திரையுலகிலும் அதற்கு மவுசு உண்டு. எடிட்டர் லெனின் போல என்னைப் பார்க்க வரும் சிலர் மசால்வடை செய்திருக்கிறீர்களா என்று கேட்டு சாப்பிடுவார்கள்.


 அம்மா சமைக்கும் போது அவர்களுக்கு உதவி செய்துதான் என் சமையல் கலை வளர்ந்தது. அப்போதெல்லாம் அரைத்துவிட்ட சாம்பார்தான். எனக்கு எதை எப்படி அரைப்பது எவ்வளவு அரைப்பது என்று எல்லாம் அனுபவத்தில் வந்துவிட்டது. என் அம்மாவுக்கு நாக்கு எட்டு முழம். அதே போல் எனக்கும் வளர்த்து விட்டிருக்காங்க. அவங்க யார் ரொம்ப நல்லா சமைச்சாலும் பெரிசா பாராட்ட மாட்டாங்க. அவங்க கிட்ட நல்லா இருக்குன்னு பேர் வாங்கறது கஷ்டம். ஆனா நான் சமைச்சா, எதுவும் கமெண்ட் வராது. நாம தூண்டிக்கேட்டா, ‘ம்ம்ம்ம்., இருக்கு!’ என்று தான் வாயிலிருந்து வரும்! அதுதான் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன்.

 சென்னையில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு திருப்தி இருக்கிறதில்லை. அதனாலே நானே சமைச்சுகிறேன். எங்க அம்மா செய்யாத சமையலைக் கூட பரிசோதனை செய்திருக்கேன். என் குழந்தைகள் அப்பா கூட்டு, அப்பா பொரியல் என்று பேர் சொல்லும் அளவுக்கு அது ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு. 1955-ல் நான் டெல்லிக்கு என் அக்கா வீட்டில் போய் தங்கினேன். அங்கேயும் என் சமையல் தொடர்ந்தது. இது சமையலோட முடியலை. நான் சாப்பிடும் ஊறுகாய் எல்லாம் நானே போடறது. பொதுவா ஒருத்தர் சமைக்கிறது சாயந்தரமே ஊசிப்போயிடும்; ருசி இழந்திடும். ஆனால் நான் செய்றது எல்லாத்துக்குமே ஷெல்ப் லைப் அதிகம். அது கைவாக்கு என்று சொல்வார்களே அதுவாக இருக்கலாம். மத்தவங்க புளி இஞ்சி செஞ்சா ஒரு வாரம் வெச்சுக்கலாம். ஆனா நான் செஞ்சா அது இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. சுவை மாறாது.

 இப்ப சாதாரணமா இருக்கிற விஷயங்கள் அந்தக் காலத்தில் பெரிய விஷயங்களாக இருந்தன. உதாரணத்துக்கு சேவை அதாவது இடியாப்பம். சாதாரணமா எல்லா இடங்களிலும் தேங்காய்ப் போட்டு அல்லது எலுமிச்சை போட்டு செய்வாங்க. எங்க ஊர்ல அதாவது நாஞ்சில் நாட்டில் சேவை செய்தால் மூணுவேளையும் அதுதான். இப்ப பச்சை மாவை பிழிந்து வேக வெச்சிடறாங்க. அப்பல்லாம் சேவை நாழியில் பொருந்தறமாதிரி மாவை கொழுக்கட்டை மாதிரி பிடிச்சு ஏராளமா வேகவெச்சு, அப்புறம் அதை நாழியில் திணித்து சேவை செய்வாங்க. 50களில் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது எனக்கு அது ஒரு வேடிக்கை. ஒரு உலக்கையை, இதற்காகவே செஞ்சு வெச்சிருக்கற ஓட்டையில் செருகி எதிர்முனையில் உட்காரச் சொல்வாங்க. அப்போ மாவு அழுந்தி சேவையா வரும். சேவை, மோர்க்குழம்பு, அப்பள வடாம்தான் காம்பினேஷன். அப்பல்லாம் சேவை பண்றதுன்னா பெரிய நிகழ்வு. போறவ வர்றவங்கல்லாம், உங்க வீட்ல சேவையான்னு கேட்பாங்க.

 அதேபோல் அடுப்புகளும் ஞாபகம் வருது. கொடி அடுப்பு, மரத்தூள் அடுப்பு, டெல்லியில் பயன்படுத்துன இரும்பு வாளியில செஞ்ச நிலக்கரி அடுப்பு... இப்பல்லாம் பொத்தானைத் திருகினா கேஸ் எரியுது... ஆனா அப்ப டெல்லியில் நிலக்கரி அடுப்பு பயன்படுத்துன காலத்தில் நாங்க குடியிருந்த பகுதிகளில் காலையிலயும் மாலையிலையும் அந்த பகுதியே பெரும் புகைமூட்டமா இருக்கும். ஒவ்வொரு வீட்டுலயும் அடுப்பு எரியும். அப்பல்லாம் கடுகு என்றால் பெரிய கடுகுதான். இப்ப தமிழ்நாட்டில் எந்த வீட்டில் போனாலும் பயன்படுத்துற சின்ன கடுகு அந்தக் காலத்தில் ஆவக்காய் ஊறுகாயில்தான் போடுவாங்க. நான் இப்பவும் பெரிய கடுகுதான் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தறேன். பெரிய கடுகுன்னு கேட்டாதான் தருவான். அதுக்குன்னு ஒரு தனி ருசி, மணம் உண்டு. நல்லா ஊறினத ஒவ்வொண்ணா எடுத்து சாப்பிடறது தனி ருசி.

 எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இங்கே என் வீட்டில் வந்து தங்குவார். எனக்கு அவரைப் பிடிக்கும். அதைவிட என்னை அவருக்குப் பிடிக்கும். அவர்கிட்ட பேசுன ஒரு சமாச்சாரம் அப்பக்கொடி. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசத்துக்கு இரண்டுமாசம்தான் இது விளையும். அதை பெரிய பாரவண்டியில ஏத்திக்கிட்டு வருவாங்க. இந்தக் கொடியை பிராமண அக்ரஹாரங்களில் பயன்படுத்துவாங்க. அதை ஓட்டிக்கிட்டு அக்ரஹாரத் தெருவுக்கு உள்ளே வந்தா, அரை மணி நேரத்தில் முழு வண்டி சரக்கும் வித்துப்போயிடும். காலி வண்டிதான் திரும்பிப் போகும். வண்டிக்காரன் கை நிறைய பணத்தை எண்ணிக்கிட்டே திரும்பிப்போவான். அந்த கொடியின் இலையை சின்னதா வெட்டி, வேட்டிகளில் போட்டு, நிழலில் உலர்த்தணும். ரெண்டாவது நாளில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வீச ஆரம்பிக்கும். தெருவில் நடமாட முடியாது. இந்த கொடி கெட்ட நாற்றம் அடிக்கிறதுக்கு காரணமா ஒரு வேடிக்கை கதை உண்டு. ராவணன் காட்டில் சீதையை தேடிப்போனப்ப இந்த செடி மேல குசு விட்டுட்டானாம். அதனால் இந்த செடிக்கு கெட்ட நாற்றம் பிடிச்சுகிட்டுதாம். ஆனால் அந்த பேருக்கு எந்த குறையும் வைக்காம அப்படி ஒரு நாற்றம்... அதனால் இந்த கொடிக்கு இன்னொரு பேரு ராவணன் குசு! அது நல்ல உலர்ந்தபிறகு அளவில் மிகவும் குறைந்துவிடும். அந்தப் பொடியை எடுத்து பாட்டில்களில் வெச்சிக்கிட்டு, தாளிக்கப் பயன்படுத்துவாங்க. தேங்காய் அரைச்ச குழம்புல, மோர்க்குழம்புல தாளித்தால் ஆஹா... அதன் மணம் எப்படி இருக்கும் தெரியுமா? ராவணன் குசுவா நாறினது, என்ன மாயமோ தெரியாது..... சமையலில் பெரும் மணம் தரக்கூடியதா மாறிடும். இந்த அப்பக்கொடி எங்க நாஞ்சில் நாட்டுப் பகுதியில் மட்டும்தான் உண்டு. ஆனா இப்ப அது வழக்கொழிஞ்சு போச்சு. நான் எதுக்கு இதைச் சொல்றேன்னா அந்த காலத்தில் எல்லா சீசன்லயும் வீட்டுல இருந்த ஒரு பொருள் இப்ப எப்படி இல்லாமல் போயிடுச்சுன்னு குறிப்பிடறதுக்காகத்தான்.

மணிரத்னத்தின் ‘கடல்’  படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் போனப்ப, இந்த அப்பக்கொடியை அந்த கோயிலில் இருக்கவங்க -- நாங்க முக்காணியர் என்று சொல்லுவோம் -- உபயோகப்படுத்துவாங்கன்னு கேள்விப்பட்டு, நான் அங்கே இருந்தவங்க எல்லார்கிட்டேயும் கேட்டேன். கடைசில ஒரு பையன் கொண்டுவந்து கொடுத்தான். அவன் சின்ன பையில் கொண்டு வந்திருந்தான். அவன் அப்ப என் சொத்துல பாதியைக் கேட்டாலும் எழுதிக் கொடுத்திருப்பேன். அந்த சின்னப்பையன் காலில் விழலாமா என்று தோன்றுகிற மாதிரி அது ஒரு அபூர்வம் எனக்கு. பின்ன அத தங்க பஸ்பம் பயன்படுத்தற மாதிரி ஆறுமாசம் வெச்சிருந்து பயன்படுத்தினேன். ஏன்னா அதன் ருசி என் நாக்குல அப்படியே இருக்கு. எனக்கு அப்பக்கொடி மட்டும் ரெகுலரா யாராவது சப்ளை பண்ணா.. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் சுரண்டினது போக மீதி இருக்கிறத எழுதி வெக்க நான் தயாரா இருக்கேன்.

 தென்னிந்திய உணவு வகைகள் சமைக்கும்போது பூண்டு, பட்டை போன்றவற்றை பயன்படுத்தமாட்டேன். எப்பவாவது பூண்டு ரசம் வெச்சால் மட்டும் பூண்டுக்கு சமையலறையில் அனுமதி உண்டு. என் சமையலில் பெருங்காயம் தூக்கலா பயன்படுத்துவேன்.

 எங்க ஊர்ல நான் சின்ன வயசுல இருக்கும்போது வடசேரில குண்டுப்போத்தி ஓட்டல் உண்டு. எங்க அம்மா 2 ரூபாய் கொடுப்பாங்க. ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகள் வாங்கிட்டு, மீதி இரண்டணாவில் அந்த ஓட்டலில் ரசவடையும் மசால்தோசையும் காப்பியும் சாப்பிடுவேன். ரசவடைன்னா தமிழ்நாட்டில் எல்லா பவன்களிலும் நேற்று பண்ணி மிஞ்சிப்போன வடையை ரசத்தில் ஊறவைத்துத் தர்றான். ரசவடை என்கிற பெயருக்கே இது அவமானம்! மாவு அப்பவே அரைச்சு செய்யணும்! ரசவடைன்னா பெரிசா ஊறி இருக்கும். அதை ஒரு விரலால் குத்தினா பூ விரியறா மாதிரி விரியும். அந்த இடைவெளியிலே சட்னியை விட்டுட்டே போவான். அந்த சட்னியை குடு குடுன்னு உள்வாங்கிடும் அந்த வடை. சொர்க்கத்துக்கெல்லாம் போகவே வேண்டாம்! அதுல ஒரு துண்ட விண்டு சாப்பிட்டா போதும்! நான் சமையலை ஆராதிக்கிறவன்.

நாஞ்சில் நாட்டு அவியலுக்கும் மற்ற ஊர் சமையலுக்கும் என்ன வித்தியாசம்னா, தயிர் சேர்ப்பாங்க. அதனால இந்த அவியலை இலையில் வைக்கும்போது ஒரு நீரோட்டம் உருவாகி அது சோறை நோக்கி ஓடிவரும். ஆனா எங்க ஊர் அவியலோ, என்னை எடுத்து சாப்பிடுன்னு சொல்லி கம்பீரமா இலையில் உட்கார்ந்திருக்கும்! இப்பவும் நான் டெல்லியில் இருக்கிற என் பொண்ணு வீட்டுக்குப் போனா, வேலைக்கார அம்மாவுக்கு லீவு கொடுத்துட்டு நானே தான் சமைப்பேன்! இன்னொருமுறை இவரது பூசணிக்காய் அல்வாவை சாப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடைபெற்றோம்.

 நாஞ்சில்நாட்டு அவியல்: எங்க ஊர் அவியலில் தயிர் சேராது. புதுப்புளி சின்ன உருண்டை, போதுமான உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சம் சீனி. நாட்டுக்கறிகாய்கள் (சேனை, புடலை, வாழைக்காய், முருங்கை, சீனி அவரைக்காய், நாட்டுக் கத்தரிக்காய், வெள்ளைப் பூசணி, வெள்ளரிக்காய்) பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணி, காலிபிளவர் என்று போட்டு இப்போது கொடுமை செய்கிறார்கள். காரட் பயன்படுத்தலாம். அதன் சிவப்பு வண்ணத்துக்காய் போனால் போகிறதென்று அதற்கு மட்டும் அனுமதி. இந்த நாட்டுக்கறிகாய்களை ஒண்ணே கால் இஞ்ச் கனத்தில் நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் இரண்டு இஞ்ச் நீளத்துக்கு வெட்டவும். ஒருமூடித்தேங்காய், 4,5 பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம். தேங்காய் விழுதை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளை திக்கான புளிக்கரைசலுடன் கலந்து, போதுமான தண்ணீர் வைத்து, காய்கறிகளை அவற்றிற்கு ஏற்ப வேக வைக்கணும். கடைசியில் இறக்கி வைக்கும்போது 3,4 கரண்டி தேங்காய் எண்ணையை அதன் தலையில் யோசிக்காமல் ஊற்றணும். கறிவேப்பிலை எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்!

 (சந்திப்பு: செல்வன் )

 (அந்திமழை மார்ச் 2015 இதழில் வெளியான நேர்காணல்)

Sunday, October 8, 2017

"புள்ளிகள் கோடுகள் கோலங்கள்" -பாரதி மணி. ”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”. ”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்” இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம். ”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமளும் இருக்கமே!!!!" பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்த்து கொண்டுவரும் சம்பவங்கள்,... நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி". இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே சமர்ப்பித்திருக்கிறார். “ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import" சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்). நாகர்கோவில் -> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள். திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தகம்முழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.திருவாடுதுறையாரின் தோடியும் , வெள்ளி டம்ளரும்... (கட்டுரை : "நாதஸ்வரம் ‍‍‍, என்னை மயக்கும் மகுடி".) ("சங்கீத கோட்டி"யான தனக்கு மிகவும் பிடித்த கட்டுரை என்று நெகிழ்கிறார் "பாட்டையா" வார்த்தைக்கு "காப்பிரைட்" கேட்கும் சுகா...) ”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால், என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?” “தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா... “சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை.... படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள். மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது. மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் ரசவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது... ”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.., ”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும். தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்.... ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்பட்ட குழப்பம், இன்னும் பல பல விஷயங்கள்..... ”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம். ["கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார். ] (சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும். சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை தனதாக்கிகொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,.... “தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார். புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்..............(படித்ததில் ஆக பிடித்தது சுகாவுடையது...) பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!" வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்???? Bharati Mani ************************************* புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதிமணி வம்ஸி புக்ஸ் ISBN # 978-93-84598-06-8 விலை : ரூ. 550. ************************************* www.vazhippokkann.blogspot.com
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதிமணி Unexpected compliments from unknown readers do add some momentary pep in an early morning! அன்புள்ள தன்ராஜ், குடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டாலும், இதுபோன்ற வாசகர் கடிதங்கள் எனக்கு சற்று போதையை தருகின்றன என்பதை மறுக்கமுடியாது!... ஏனோ இக்கடிதத்தை இருமுறை படித்தேன். உங்களுக்கு என் நன்றி! பாரதி மணி =============================================== அன்பின் பாரதி மணி சார், இப்போழுதே படித்து முடித்து, ”புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” புத்தகத்தை என் முன்னால் உள்ள ரயில் மேஜையில் மூடி வைத்தேன். அதன் அட்டைப்படத்தில் நீங்கள் மோவாயை தாங்கி கொண்டு என்னை நோக்கி மென் புன்னகை சிந்திக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உங்களுக்கு உடனடியாக வாசக கடிதம் அனுப்ப வேண்டும் என்று தோன்றிவிட்டது. இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் வாசக கடிதம். பல கட்டுரைகளை உங்கள் வலைப்பூவிலும், உயிர்மையிலும் பல முறை படித்திருந்தாலும் முழு தொகுப்பாக படித்து முடித்தது வேறு ஒரு வித நிறைவான அனுபவத்தை கொடுத்தது. உங்கள் எழுத்துக்கள் எனக்கு எப்போழுதும் ஒரு இரண்டு பெக் போட்டுவிட்டு வாஞ்சையுடன் பேசும் ஒரு நெருங்கிய நண்பன் தன் அனுபவங்களை சொல்வது போல இருக்கும். இந்த முறை சில பாராட்டுரைகளை படிக்கும் போது மரியாதைக்குரிய முது குடிமகனாகவும் மனதில் பதிந்துவிட்டீர்கள். இருப்பினும் எனக்கு அந்த வாஞ்சையான நண்பனைத்தான் மிகவும் பிடித்திருக்கிறதென்பதைச் சொன்னால் கோபப்பட மாட்டீர்களென நினைக்கிறேன். இந்தக் கடிதமே நீங்கள் எப்பொழுதும் சொல்லும் "one book wonder" ஆக நீங்கள் நிற்காமல் மேலும் மேலும் எழுத வேண்டும் என வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்ளத்தான். சமீபத்தில் உங்கள் திருமணம் பற்றி எழுதியிருந்ததை வாசித்து விட்டு என் மனைவிக்கும் வாசித்து காட்டினேன். சார் உங்களை போல் சிறிதளவாவது நான் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் பெங்களூர் வாசியாகிவிட்டீர்கள் என கேள்வி.பெங்களூர் பிடித்திருக்கிறதா சார்? நீங்கள் பூரண உடல் நலத்துடனும் , உற்சாகத்துடனும் நிறைய எழுத வேண்டும் என இறைவனிடம் ப்ராத்திக்கிறேன். Thank you for the joy you brought to my life through your writings sir. தொடர்ந்து எழுதுங்கள், படிக்க என்னைப் போன்ற பல்லாயிரம் வாசகர்கள் உலகம் முழுக்க காத்திருக்கிறோம். இப்படிக்கு, உங்கள் விசிறி, தன்ராஜ். Sent from a phone. Please excuse brevity and typos.

Friday, October 6, 2017


புள்ளிகள் கோடுகள் கோலங்கள்—பாரதி மணி  இப்புத்தகம் ஒரு தொகுப்புகளின் தொகுப்புபாரதிமணியின் கட்டுரைகள், பதிவுகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், உரைகள், கடிதங்கள், மதிப்புரைகள் ஆகிய அனைத்தையும் வகைவாரியாகத் தொகுத்து அவற்றை ஒரே தொகுப்பு நூலாக வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

பார்வதிபுரம் மணி அல்லது தில்லி மணி அல்லது S.K.S.மணியாக இருந்தவர் பாரதி (2000) திரைப்படத்தில் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயராக நடித்துப் பரவலாக அடையாளம் காணப்பட்டதால் அத்திரைப்படப்பெயரை முன்பெயராக இணைத்து 'பாரதி'மணி ஆகியிருக்கிறார். 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, 'நிழல்கள்' ரவி போன்றபெயர்கள் காலப்போக்கில் தங்கள் ஒற்றைமேற்கோள்குறிகளை இழந்து அவர்களின் இயற்பெயர்களாகவே ஆகிவிட்டதைப்போல 'பாரதி'மணியும் சிலவருடங்களில் பாரதிமணி ஆகிவிட்டார். ஒருவருக்கு அறுபது வயதுக்குமேல் புதிதாக ஒருபட்டப்பெயர் கிடைப்பதும் அது இயற்பெயரோடு ஒன்றிவிடுவதும் ஓர் ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் 1956ல் தக்ஷிணபாரத நாடகசபாவைத் தொடங்கி அதில் நடிக்கவும் தொடங்கி சுமார் இரண்டாயிரம் நாடகங்கள் போட்டு நடித்தவருக்கு, லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் குரல்பயிற்சியில் டிப்ளோமா பெற்றவருக்கு ஒரு சினிமாவின் சிறுவேடம்தான் இன்றைய முகவரி ஆகியிருக்கிறது. சினிமாவின் வீச்சு அப்படி என்று ஆப்டிமிஸ்டிக்காக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்தன்னையொரு incorrigible optimist ஆக அறிவித்துக்கொள்ளும், 77 வயது நிறைந்த, டெல்லியில் ஐம்பது வருடங்களைக் கழித்த, க.நா.சு.வின் மாப்பிள்ளையான, இந்த மனிதரைப்போல. நாடக நடிப்பு பெயரைக் கொடுக்காவிட்டால் என்ன? வாழ்க்கைத் துணையையே இவருக்கு அமைத்துத்தந்திருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' நாடகத்தில் 1970ல் இவருடன் சேர்ந்துநடித்த க.நா.சு.வின் மகள் ஜமுனாவைத்தான் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்.



அனுபவக் கட்டுரைகளை வரலாறாகச் சுவைபட எழுதத்தேவையான நினைவாற்றலையும், ரசனையையும், பாசாங்கின்மையையும் - தன் பதினெட்டாவது வயதில் (1955) நாகர்கோவிலிலிருந்து வேலைக்காக தில்லிசென்ற - இவரது எழுத்துக்களில் உடனடியாக எவரும் கண்டுகொண்டுவிடமுடியும். அந்தகாலத்தில் டில்லியிலிருந்து சென்னை வரும் ஜனதா எக்ஸ்பிரஸ் பயணத்தை எழுதவருபவர், 'எப்போது சென்னை சேருமென்பது அப்போதைய ரயில்வேமந்திரி ஜக்ஜீவன்ராமுக்கே தெரியாது. வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலுன் உடனே நிற்கவேண்டுமென்ற தனியாத ஆசை அதற்குண்டு' என்றெழுதியிருப்பது ஒரு சோறு. 'லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜிமந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA-50L என்று எழுதிவைத்திருந்ததற்கு, அத்வானி என்ற தன் மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத்தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். CBIயும் ஏற்றுக்கொள்கிறது' என்றெழுதியிருப்பது இன்னொரு சோறு. பாசாங்கின்மைக்குத் தனியாக உதாரணம் ஏதும் தேவையில்லை; தொலைபேசியை பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழித்த தருணத்திலிருந்து தன் மது, புகைப்பழக்கங்களை விரிவாகப் பேசுவதிலிருந்து, எவ்வளவு புகழ்பெற்ற ஆளுமைகளைப்பற்றியும்  நினைத்ததைச் சொல்லிவிடுவதுவரை அனைத்தையும் வாசகர்முன் வெளிப்படையாக வைத்துவிடுகிறார்.

ராமச்சந்திரகுஹாவின் 'காந்திக்குப்பின் இந்தியா'வில் ஐனூற்றுக்குமேற்பட்ட சின்னதும் பெரிதுமான சமஸ்தானங்களை எப்படியெல்லாம் பாடுபட்டு சர்தார் படேல் தலைமையில் ஒன்றிணைந்த இந்தியாவாக்க முயற்சிகள் நடந்தன என்பது விரிவாக எழுதப்பட்டிருக்கும். அதை வாசிக்கும் ஒருவருக்கு, இந்தியா என்ற தேசத்தைக்கட்டியமைக்கும் பார்வையிலிருந்து, திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவிற்சேராமலிருக்க சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர் (சமஸ்தான திவான்) தன் நாவன்மையாலும் செல்வாக்காலும் செய்த தடைகள் ஒரு வில்லன் தோற்றத்தை உருவாக்கும். அந்த வில்லனை இன்னொரு கோணத்திலிருந்து பாரதிமணியின் 'நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்' கட்டுரையில் காணமுடிகிறது. சர்.சி.பி.யின் சிறப்பும், தரப்பும் அக்கட்டுரையின் ஒருபகுதியாக சுருக்கமாக வருகிறது. வரலாற்றில் குணம் நாடிக் குற்றமும் நாடும் பொறுப்பு அவ்வகையில் வாசகருக்கே விடப்படுகிறது.

பாரதிமணியினும் ஏழெட்டுவயது மூத்த இந்திரா பார்த்தசாரதி, கிட்டத்தட்ட சமவயதுள்ள வெங்கட் சாமிநாதன், அவரைவிடப் பத்துவயது குறைந்த நாஞ்சில் நாடன், நாஞ்சிலைவிடப் பதினைந்துவயது குறைந்த ஜெயமோகன், ஜெயமோகனைக்காட்டிலும் பத்துவயது குறைந்த சுகா என்று பாரதிமணியை நெருக்கமாக அறிந்த பலதலைமுறைகளும் சொல்லிவைத்தாற்போல் ஒரேகுரலில்,  'நீங்க எழுதியதைவிட எழுதாததுதான் அதிகம்' என்றும் 'நீங்க எல்லாத்தையும் எழுதணும்' என்றும் தனித்தனியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதிமணிக்குத் தத்தம் எழுத்துக்களில் வேண்டுகோள் விடுக்குமளவுக்கு இவரிடம் எழுத அப்படி என்ன இருக்கக்கூடுமென்ற கேள்விக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது 1956ல் நடந்த ஒரு...... விருந்துமுடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், 'why this prolonged cold war between Sivaji Ganesan and MGR?' என்று அவர்கேட்ட முதல்கேள்வியும், அதைத்தொடர்ந்துவந்த 'ஜெமினிகணேசன்-சாவித்திரி திருமணத்திற்கு முதல்மனைவி சம்மதம் இருந்ததா?', 'சரோஜாதேவிக்கும் இன்ன நடிகருக்கும் என்ன தகராறு?', 'அந்த ஹிந்தி நடிகை இப்போதெல்லாம் அதிகமாகக் குடிக்கிறாராமே?' போன்ற கிசுகிசு கேள்விகளும் நம் குடியரசுத்தலைவர் வாயிலிருந்து வந்ததை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை.... அவரைப்பார்க்கும்போது என் மனதுக்குள் இருந்த பிம்பம் இந்தியாவின் சமகால வேதாந்தியின் impeccable English ஆளுமையும், என் தந்தையிடம் பார்த்த ஐந்து வால்யூம் Indian Philosophy - By Dr.S.Radhakrishnan புத்தகங்களும்தான். தந்தையிடம் இதைப்பற்றிச்சொன்னபோது, 'அவாளும் மனுஷாதானேடா. நமக்கிருக்கிற ஆசாபாசங்கள் எல்லாம் அவாளுக்கும் உண்டு' என்பதுதான் அவர் பதில்" என்ற பத்தியை ஒரு கட்டுரையில் படித்ததும் கொஞ்சமாகவும், 'எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்..... எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான் ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர்' என்று கூர்மையாகத் தொடங்கி மேன்மேலும் விளக்கிச்சென்று கிட்டத்தட்ட சர்தார்ஜிகளின் இனவரைவியல் கட்டுரையாகவே 'சிங் இஸ் கிங்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த இன்னொரு கட்டுரையைப் படித்ததும் முழுமையாகவும் பதில் கிடைத்தது. இதுதான் என் முதலும் கடைசியுமான புத்தகம் என்று சொல்பவரிடம் அவர்கள் எல்லாத்தையும் எழுதச்சொல்லி வற்புறுத்துவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

கேள்வி ஞானத்திலேயே நூறு ராகங்கள்வரை கண்டுபிடிக்குமளவுக்கு இவர்சிறுவயதிலேயே பெற்றிருந்த ரசிப்புத்திறனும், பின்னாட்களில் தில்லி கர்நாடக சங்கீத சபாவுக்குச் செயலராக இருந்தபோது கிடைத்த தமிழ்நாட்டின்அநேக முதல்தரக் கர்நாடகசங்கீதக் கலைஞர்களின் நெருக்கமான நட்பும் இவரை எழுதச்செய்திருக்கும் 'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' கட்டுரை சங்கீத ரசிகர்கள் தவறவிடக்கூடாதது. வருடாவருடம் கிருஷ்ணகான சபா ஏற்பாடுசெய்யும் நாதஸ்வர விழாவில் தவறாமல் கலந்துகொண்டு இன்னொரு ராஜரத்தினமோ, அருணாச்சலமோ தென்படுவார்களா என்று தேடுவது ஏதோ பொழுதுபோகாமல் சங்கீதம் கேட்பவரல்ல இவர் என்பதைச்சொல்கிறது. சுப்புடுவின் நிர்தாட்சண்யமான இசைவிமர்சனங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் தான் பார்த்தேயிராத ஒரு நாடகத்திற்கு தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாகக் காட்டமான விமர்சனம் எழுதி அது ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையிலும் வெளியானதை 'சுப்புடு சில நினைவுகள்' கட்டுரையில் அறியமுடிகிறது. நாடகம் சுப்புடுவின் எதிர்முகாமினரால் - இதில்தான் மணி இருக்கிறார் - முதலில் திட்டமிடப்பட்டுப் பிறகு கடைசிநேரத்தில் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது தெரியாததால் நடந்திராத நாடகத்தை அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்த சுப்புடு கையுங்களவுமாக மாட்டிக்கொண்டுவிட்டார். இவருடனான நட்பாலோ என்னவோ 'Mani's acting was the only redeeming factor' என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தாராம் விமர்சனத்தை!

மணியின் கதையா? மணியான கட்டுரைகளா? என்று பிரித்தறியமுடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் ஒரு வாசகனுக்கு அளிக்கும் மதிப்புகூட்டல் மூன்று தளங்களிலானவை;

முதலாவது தன்னிலிருந்து விலக்கிவைத்துப் பார்த்துப் போற்றவோ, தூற்றவோ மட்டுமே என்று இயல்பாகவே முடிவுகட்டப்பட்டுவிட்ட வரலாற்றுப்பிரபலங்களின், வார்க்கப்பட்ட பிம்பங்களுக்கு இன்னொரு பரிமாணத்தைக்கூட்டி முப்பரிமாணத்தில் நம்மிடையே இன்னுமொரு மனிதனாக உலவச்செய்வது. இந்தியத் தத்துவமும், இந்திய சினிமா நட்சத்திர கிசுகிசுவும் ஒரே மனிதரிடத்தில் mutually exclusive ஆக இருக்கமுடியும்; ஒன்றையொன்று பாதிக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இன்றைய தலைமுறைக்குக்காட்டுவது அவசியம். சாதனையாளர்களும் சில தனித்திறமைகள் கைவரப்பெற்ற சராசரிமனிதர்களே என்பதை உள்ளூற உணர்வதுதான் சராசரிகள் சாதிக்கத்துணிய முதற்படி என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவது, டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்று ஒரு தகவலுடன் மட்டுமே முக்காலேமூணுவீசத் தமிழர்களுக்கு வாழ்வில் டெல்லியின் பரிச்சயம் முடிந்துபோய்விடக்கூடிய நிலையில், அங்கே அரைநூற்றாண்டு வாழ்ந்த ஒரு தமிழரின் அனுபவங்களை விரிவாகவும் நுணுக்கமான தகவல்களுடனும் வாசிப்பது அந்நகரைக்குறித்து - அங்கு செல்லாதவருக்கும் - உண்மைக்கு மிகஅருகில் மனச்சித்திரங்களை உருவாக்குவது. மண்ணும் மனிதர்களும்தான் எந்தவகை எழுத்தின் சாராம்சமும் என்பதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் பாரதிமணிக்கு எதையும் மேம்போக்காகச் சொல்லும் பழக்கமே கிடையாது என்பதால் தில்லிக்காரர்கள் வணக்கம் செலுத்துவது, ஏப்பம்விடுவது முதல் மரணத்தை அதன் சடங்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதுவரை நுண்தகவல்களுடன் - தமிழ்நாட்டின் பழக்கங்களுடன் ஒப்பிட்டும் - எழுதியிருப்பது பெருஞ்சிறப்பு. தமிழர்கள் இந்திப் பெயர்கள் உச்சரிப்பில் செய்யும் பிழைகளையும் இடம்கிடைக்கும் போதெல்லாம் லல்லு அல்ல லாலு, இர்பான் பதான் அல்ல பட்டான், சட்டீஸ்கர் அல்ல சத்தீஸ்கட், சுனில் மிட்டல் அல்ல மித்தல் என்று நூல்நெடுக பொறுப்பாக சொல்லிக்கொண்டே வருவதைப்போல் அதிகம்பேருக்குச் சொல்லத்தோன்றாது.

மூன்றாவது, ஒரு சாதாரண மனிதனின் சொற்கள் சந்தேகமின்றி அப்படியே ஏற்கப்படுவதை வாசகர் காண்பது. சொல்லப்படும் நிகழச்சிகள் கிசுகிசுக்களாக அல்லாமல் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்க்கப்படுவதன் ஆதாரப்புள்ளி இதில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து விடிந்து வெகு எளிதாகக் கடந்துபோய்விடக்கூடிய வாழ்நாட்களின் சாதாரணமான சம்பவங்கள் வழியாகத்தான் மெல்லமெல்ல, அறிந்தவர்களின் நட்பின் நம்பிக்கைக்கு ஒருவர் பாத்திரமாகமுடிகிறது. நீண்டநெடிய பொறுப்பான அவ்வேலையின் இறுதியில் கிடைக்கும் பரிசு, எழுதும் ஒரு சொல்லும் உதாசீனப்படுத்தப்படாமல் ஏற்கப்படுவதுதான்; தனிப்பட்ட முறையில்  அறிந்தவர்களால் மட்டுமல்லாமல் வாசிப்பவர்கள் அத்தனைபேராலும். தோழர் நல்லகண்ணுவை திருநெல்வேலி ஜங்ஷனில் சந்தித்தபோது உரையாடிவிட்டு ரயிலில் ஏறப்போனப்பொது தோழர் சாதாரண ஸ்லீப்பரிலும், தான் ஏ.சி.யிலும் பயணம் செய்வதை யோசித்துக்கொண்டே குற்றவுணர்ச்சியில் ஒரு ராத்திரி தூக்கமிழந்த மனிதரின் வார்த்தைகளை நம்புவதற்கு என்ன கஷ்டம்?

மணியுடன் நாதஸ்வர இசையைத் துணைக்கு வைத்துக்கொண்டு மதுவருந்துவதேகூட இலக்கிய அனுபவம்தான் என்று இலக்கியப்பிரபலங்களால் வழங்கப்படும் சான்றிதழ்களைத்தவிர நேரடியாக எழுத்திலிருந்தே வாசகரை நெகிழச்செய்யும் அனுபவங்களும் நூலில் உண்டு. உதாரணமாகக் குடியரசுதினக் கொண்டாட்டங்களின் நிறைவைக்குறிக்கும் வகையில் ஜனவரி 29ம் தேதி மாலை ஆறுமணிக்கு, வருடாவருடம் முப்படைகளின் பாண்டுவாத்தியக் குழுக்களும் இணையும் பிரம்மாண்டமான Beating Retreat நிகழ்ச்சியைப் பற்றி அறிமுகப்படுத்தி இவரெழுதியிருக்கும் விதத்தில் அதைப்பார்க்காமலேயே நெஞ்சு தேசப்பெருமிதத்தில் விம்மிப்புடைக்க ஆரம்பித்தது உண்மை. இலக்கிய அனுபவம் மெல்ல தேசப்பெருமித உணர்வாக மாறும் தருணமாக அது இருந்தது. பிறகு அந்நிகழ்ச்சியின் இந்த வருடக்காணொளியையும் - முதன்முறையாக - இணையத்தில் பார்த்து பிரமித்தேன்.

கொஞ்சமும் சந்தேகத்திற்கிடமின்றி வரலாற்று மதிப்பு மிகுந்ததொரு எழுத்து, தொகுப்பு.

(புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 560, விலை  ரூ.550)


   
- சிவானந்தம் நீலகண்டன்