Friday, January 22, 2016

எத்தனையோ நண்பர்கள் ஏன் எங்க ஊருக்கு வந்து நாடகம் போட மாட்டீங்களானு கேக்கிறாங்க. அவர்களுக்கெல்லாம் சேர்த்துத்தான் இந்த பதில்:
ஒங்க ஊரு மூத்த பிள்ளை — கள்ளப்பணம் வைத்திருக்கும் ‘நல்ல’ அரசியல்வாதியாக இருந்தாலும் பரவாயில்லை — ஒத்தரைப்பிடிச்சு, பணத்துக்கு ஏற்பாடு பண்ணி, ஒரு நல்ல தியேட்டர் புக் பண்ணி, எங்கள் சென்னை அரங்க நாடகக்குழு அங்கே வரவும், தங்கவும் திட்டமிட்டால், காலணா சன்மானம் வாங்காமல், ஒரு நல்ல நாடகத்தை திருப்திகரமாகப் போட்டுவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு ரயிலேற நான் தயார்!
உங்களில் எத்தனை பேர் எத்தனை ஊர்களில் தயார்?……..சொல்லுங்கள்.
இரு விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
1. நான் சம்பந்தப்பட்ட நாடகங்கள் இலவசமாகத்தான் இருக்கும்…..இருக்கவேண்டும். நாடகம் எல்லா மக்களையும் போய்ச்சேரவேண்டும். முடிந்தால் உங்களுக்கு தெரிந்த இடத்தில் ஏதாவது ஸ்பான்ஸர் ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு பைசாவும், முறையாக செலவிடப்படும் என்பதற்கு நான் காரென்டீ.
2. சுஜாதா சுந்தர் பாத்திரத்தை ஒரு பிராமணப் பையனாகத்தான் படைத்திருந்தார்…… தில்லியிலும் அப்படித்தான் இருந்தது. இங்கே சென்னை அரங்கத்தில் ராம்குமார் நடிப்பது மட்டுமல்ல., அரங்கத்துக்கே ஒரு தூணாக இருந்தான். அப்போது தான் ஒரு ஐடியா….ஏன் அக்காலத்து சீனிவாசனும், லக்ஷ்மியும், சாதிகளை மறந்து, ஒரு புத்திசாலிப்பையனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? இது இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு நல்ல விஷயத்தை சொல்லாமல் சொல்லுமே என்று தோன்றியது. இப்போது மற்றவர்கள் பிராமண வீடுகளுக்கு வந்தால், தேவையே இல்லாமல் பிராமண பாஷை — அதுவும் தப்புத்தப்பாக — பேசுவார்கள். சுந்தரை அப்படி ஒரு பாத்திரமாக கொண்டுவந்தால், ஆரோக்யமாக இருக்குமென்று தோன்றியது எனக்கு.

0 comments:

Post a Comment