Friday, January 22, 2016

இம்மாதம் எட்டாம் தேதி தனது எண்பத்தைந்தாம் வயதில் மறைந்த ஹபீப் அஹ்மத் கான் பற்றிய செய்திகளைப் படித்த எனக்கு அந்த நல்ல மனிதருடன் பழகிய சில தில்லி அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. பெங்களூர் வந்திருக்கும் என்னிடம் நேற்று நம் ‘ஸ்ருதி’ ஆசிரியர் சமீபத்தில் மறைந்த திரு. ஹபீப் தன்வீரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதமுடியுமா என்று கேட்டார். இதை எனக்குக்கிடைத்த ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.
ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஹபீப் தன்வீர் ஹிந்தி உருது மொழிகளில் சிறந்த நாடகாசிரியர், நாடக இயக்குநர், விமர்சகர், கவிஞர், நடிகர் போன்ற பன்முக ஆளுமை கொண்டவர். தான் பிறந்த சத்தீஸ்கட் –- தமிழ்ச்சானல் செய்தி வாசிப்பாளர் வாயிலிருந்து வரும் சட்டீஸ்கார் அல்ல, சத்தீஸ் என்றால்முப்பத்தாறு — தனி மாநிலம் ஆவதற்கு முன்னாலேயே அதன் கிராமீயப்பெருமைகளை உலகுக்கு கொண்டு சேர்த்தவர். கிராமத்தில் மட்டுமே வாழ்ந்த ‘மக்கள் நாடகத்’தை நகர்ப்புறங்களுக்கு எடுத்துச்சென்றவர். இவரது புகழ்பெற்ற நாடகங்களில் சில: Agra Bazaar (1954), Charan Das Chor (1975), Gaon ka Naam Sasural, Mor Naam Damaad, Kamdeo ka Apna Pasant, Basant Ritu ka Sapna, Moteram ka Satyagrah, Mitti ki Gadi, Zehrili Hawa (விஷ வாயு – போபால்) Ponga Pandit, Jisne Lahore Nahin Dekhya, Visarjan etc, இதில் அவரது ‘பஸந்த் ரிது கா ஸப்னா’, ‘A Midsummer Night’s Dream’ நாடகத்தின் சிறந்த மொழியாக்கம்.
அவரது புகழ்பெற்ற நாடகமான ஆக்ரா பஸார் 1954-லேயேமேடையேற்றப்பட்டிருந்தாலும், அதை முதல்முறையாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு அறுபதுகளில் தான் கிடைத்தது. ஏனெனில், ஹபீப் இந்திய அரசின் ஸ்காலர்ஷிப்பில் Royal Academy of Dramatic Artsமற்றும் Bristol Old Vic Theatre-ல் நாடகக்கலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுவிட்டிருந்தார். அறுபதுகளில் மீண்டும் மேடையேற்றப்பட்ட ஆக்ரா பஸார் ஹபீப் தன்வீருக்கு நாடக உலகில் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுத்தந்தது. மிர்ஸா காலிப் வழிவந்த 18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த நஸீர் அக்பராபாதி என்ற மக்கள் கவிஞனைப்பற்றியது ஆக்ரா பஸார். இந்த நாடகத்துக்காக, சத்தீஸ்கடிலிருந்து கிராமியப்பாடகர்களும், வீதிநாடக நடிகர்களும் தில்லிக்கு வரவழைக்கப்பட்டனர். அந்தக்காலத்து எஸ்.ஜி. கிட்டப்பா போல ஐந்து கட்டை சுருதியில் அவர்கள் ஹார்மோனியத்தோடு இழைந்து பாடுவது நாடக அரங்கின் வெளியிலும் துல்லியமாகக் கேட்கும். தில்லி ஓக்லா பகுதியிலிருந்தும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலிருந்தும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடகமொழியும் ஹிந்தியிலிருந்து சத்தீஸ்கடியாக மாறியது. நாடகத்தில் நேட்டிவிட்டிக்காக நடிகர்கள் மேடையில் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொள்வதும், மேடையிலேயே சிறுநீர் கழிப்பதும், ’நாடகப்பண்டிதர்களை’ முகம் சுளிக்கவைத்தது. ஸகாராம் பைண்டர் நாடகத்தில் தான் விஜய் டெண்டூல்கர் நிறைய கெட்டவார்த்தைகளை அள்ளித்தெளித்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் ஹபீப் தன்வீர் விஜய் டெண்டூல்கருக்கும் முன்னோடி!
அவருடைய நடிப்பைப்பற்றி அவருக்கே ஒரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. இருந்தாலும் அவரது நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார். சரண்தாஸ் சோரில் ஒரு போலீஸ்காரராகவும், புட் பாத், காந்தி, மங்கள் பாண்டே, ஹீரோ ஹீராலால், ப்ளாக் அண்ட் ஒயிட், ப்ரஹார் போன்ற சினிமாப்படங்களிலும் தலையைக் காட்டியிருக்கிறார். இவையெல்லாமே நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கித்தான்.
சீப்பையே பார்த்திராத தலைமுடியுடன், எப்போதும் ‘’ போல் வளைந்து தானிருப்பார். ‘நான் கோட்டு சூட்டு போட்டால், எலும்புக்கூட்டுக்குப் போட்டது போலிருக்கும்’ என்று தன்னையே கேலி செய்துகொள்வார். அவருக்குப்பிடித்த உடை குர்த்தா-பைஜாமா தான்.
தில்லிக்குப்போன ஐம்பதுகளில் கனாட்பிளேஸில் இப்போதிருக்கும் பாலிகா பஜார் இருந்த இடத்தில் Theatre Communications Buildingஇருந்தது. அதில் தான் தில்லி தமிழ்ச் சங்கம், ரொமேஷ் மெஹ்தாவின் நாடகக்குழு, கூத்தபிரானின் சகோதரர் நாட்டிய ஆசிரியர் வெங்கட்ராமன் நடத்திவந்த ‘நாட்டிய சுதா’ இவையெல்லாம் இயங்கிவந்தன. அந்தக்கட்டடத்தில் ஹபீப் தன்வீரின் ‘நயா தியேட்டர்’ குழுவுக்கும் மாதவாடகை ரூ. 50-ல் ஒரு அறை அலாட் ஆகியிருந்தது. நானும் என் நாடகக்குழு DBNS-க்கு ஒத்திகை நடத்த ஒரு அடி நிலத்துக்காக தலைகீழே நின்று தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஊஹூம்…… நடக்கவில்லை! தன்வீர் நாடகத்திலேயே முழுகியிருந்தாலும், லெளகீக விஷயங்களிலும் மிகத்தெளிவாகவே இருந்தார். அதனால் அவருக்கு கிடைக்கவேண்டிய சங்கீத் நாடக் அகாடெமி விருது 1969-லும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் (2002) விருதுகளும் ஒவ்வொன்றாக அவரைத்தேடி வந்தன. 1972-லிருந்து ஐந்து வருடங்கள் ராஜ்யசபா அங்கத்தினராகவும் இருந்தார். சங்கீத் நாடக் அகாடெமியின் Fellow ஆகவும் இருந்தார். இந்திரா பார்த்தசாரதிக்கு ‘ராமானுஜர்’ நாடகத்துக்காக வழங்கப்பட்ட ’சரஸ்வதி சம்மான்’ விருதும், ஹபீப் தன்வீருக்கு 1990-ல் வழங்கப்பட்டது. அரசாங்கப் பொம்மலாட்டத்தில் எந்தக்கயிற்றை எப்போது இழுக்கவேண்டுமென்பது அவருக்கு நன்றாகவே தெரியும். தில்லிIndian Council for Cultural Relations மூலம் ஆண்டுக்கு ஓரிருமுறை தனது நயா தியேட்டர் குழுவின் நாடகங்களை வெளிநாடுகளில் மேடையேற்ற அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டு தான் இருந்தன. அவர் மறைவுக்குப்பின் அவரைச்சார்ந்த ஒரு குழு அரசாங்கத்திடம் தன்வீருக்கு ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்படவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறதாம். அவர் மறைவுக்குப்பின் தில்லியில் நடந்த நினைவஞ்சலியில், அவரது ஆரம்பகால நாடகங்களில் நடித்த95 வயதான பழம்பெரும் நடிகை ஸோரா ஸெய்கலும், தில்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித்தும் அஞ்சலி செலுத்தினார்கள். முதலமைச்சர் பேசும்போது, ஹபீபின் மகள் நாகின் எந்த உதவி வேண்டினாலும், தில்லி அரசு அவைகளை நிறைவேற்றக்காத்திருக்கிறது என்று உறுதியளித்தார்.
தில்லி அரசு இவருக்கு கலைஞர்கள் கோட்டாவில் இலவசமாக குடியிருக்க ஒரு வீடும் ஒதுக்கியது. அது தில்லியில் என் வீட்டுக்குப்பக்கத்திலேயே இருந்தது. அதில் தான் அவர் நாடகங்களில் நடிக்கும் சத்தீஸ்கட் கலைஞர்கள் அனைவரும் தங்கியிருந்தார்கள். அங்கே தான் நாடக ஒத்திகைகளும் நடக்கும். பார்த்தால் ஒரு பைத்தியக்கார விடுதி போல் தான் இருக்கும். யாராரோ வருவார்கள் போவார்கள். அங்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம் முகம் சுளிக்காது கேட்டபோதெல்லாம் தேநீர் கொண்டுவருவார் ஹபீபின் மனைவி மோனிகா மிஸ்ரா. ஹபீப் ஸாப் புகையிலும் தேநீரிலும் மட்டுமே உயிர் வாழ்ந்தவர். மோனிகா அவரது ‘காரியம் யாவினும் கை கொடுக்கும்’ மனைவி. இவரது மறைவுக்குப்பின் தந்தைக்கு எல்லா வழிகளிலும் ஆதரவாக இருந்தவர் ஹபீபின் மகள் நாகின். தில்லி அரசு மாறியவுடன், ஹபீபுக்கு இலவசமாகக்கொடுத்திருந்த வீட்டை அரசு பிடுங்கிக்கொண்டது. அதனால் ஹபீப் தன்வீர் போபாலுக்கு மாற நேரிட்டது.
ஒருதடவை, தில்லி கமானி ஆடிட்டோரியத்தில் ஆக்ரா பஸார் Grand Rehearsal பார்க்க நானும் என் நண்பனும் போயிரு்ந்தோம். எங்களைப்பார்த்தவுடன், ஹபீப் தன்வீர் என் கையில் ஒரு வெட்டுக்கத்தியைக்கொடுத்து, ‘மணி! நாடகத்துக்கு ஒரு மரம் தேவைப்படுகிறது. எங்கிருந்தாவது ஒரு சிறிய மரம் வெட்டிக்கொண்டுவாருங்கள். நாங்களெல்லாம் நாடகத்தில் பிஸி. அதனால் வரமுடியாது’ என்று சொன்னார். நானும் நண்பனும் இரவு எட்டுமணிக்குமேல் கோப்பர்னிகஸ் மார்க் சாலையோரமிருக்கும், பக்கத்து பார்க்கிலிருக்கும் ஒவ்வொரு மரமாகத் தேடித்தேடி, குடைபோல் அழகான மரமாகத் தென்பட்ட ஒரு பெரிய கிளையை வெட்டி, தெருவோடு சுமந்துகொண்டுவந்து, மேடையில் நிற்க வைத்ததும், அடுத்தநாள் நாடகத்தில் அந்த அழகான மரம் ’நடித்தது’ நானே அந்த நாடகத்தில் பங்கேற்றதுபோல் மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது.
அறுபதுகளின் ஆரம்பத்தில் என்னை தில்லி தேசிய நாடகப்பள்ளியில் சேரவைக்க நேமிசந்த் ஜெயினும் தன்வீரும் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் உந்துதல்களையும் நான் மறக்கமுடியாது. அவர்களே விண்ணப்பப்படிவம் வாங்கிவந்து என்னை பூர்த்தி செய்ய வைத்தார்கள். எப்போதாவது அபூர்வமாக இரவு பதினோருமணிக்கு மேல் மஸ்ஜித் மோட்டிலிருந்த என் வீட்டுக்கு வந்து, ‘I want to have a Drink with you’ என்று சொல்வார். யார் வந்தாலும் பாரபட்சமில்லாமல் இரவு பத்துமணிக்குமேல் மூடிவிடும் என் வீட்டு பார் இவருக்காக மறுபடியும் திறக்கும்! நான் திரும்பவும் முதல் பெக்கிலிருந்து ஆரம்பிப்பேன்! சமீபத்திய நாடகங்கள் குறித்த தகவல்கள், விமர்சனங்கள், வம்புகள், கிசுகிசுக்கள் இரவு இரண்டுமணி வரைபரிமாறிக்கொள்ளப்படும். Habib Tanvir was a very good conversationalist. அவர் முன் நம் வாதங்கள் எடுபடாது. அவரது பேச்சுகள் தெளிவாகவும், கவிதை நயத்துடனும் இருக்கும். இடையிடையே உருதுக்கவிதைகள் தானே வந்து விழும். தான் ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டு மற்றவர்களுக்கு உபதேசிப்பது அவருக்கு தெரியாத ஒன்று. சத்தீஸ்கட் கிராமக்கலைஞனிடமும் இறங்கிவந்து அவனுக்கு புரியும் மொழியில் அவரால் பேசமுடியும். அவரும் ஸப்தர் ஹாஷ்மியும் நெருங்கிய நண்பர்கள். ‘என்னைப் புரிந்துகொண்ட வெகுசில நண்பர்களில், ஹாஷ்மியும் ஒருவன்’ என்று அடிக்கடி சொல்வார்.
எங்களுக்குள் இருந்த ஓர் ஒற்றுமை நாங்கள் இருவரும் பைப் (Pipe) பிடிப்பவர்கள் என்பதுதான். ஹபீப் அப்போது இந்தியாவிலேயே தயாரான Wills, Capstan போன்ற மலிவுவிலை புகையிலையையே உபயோகித்துவந்தார். சில சமயங்களில் அவரிடம் ஸ்டாக் தீர்ந்துவிட்டால், மறுநாள் கனாட்பிளேஸ் போய் வாங்கும் வரை தவித்துப்போவார். சாதாரண சிகரெட் கடைகளில் இது கிடைக்காது. அந்த நேரங்களில் என் வீட்டுக்கு ஆளனுப்புவார். ஒரு குடியனின் சிரமம் இன்னொருவனுக்குத்தானே புரியும்? நான் சாக்லேட் வாசனை வீசும் Captain Black பாக்கெட் ஒன்றை அனுப்பிவைப்பேன். மறுநாள் காலை, ‘Kyaa thambaacu hai? Bahut badiyaa hai’ என்று நன்றி சொல்வார்.
ஒருநாள் நான் அவர் வீட்டுக்குப்போய் பேசிக்கொண்டிருந்தபோது, தில்லி நாடக நடிகை சுஷ்மா சேட் அவரைப்பார்க்க வந்தார். (இவர்அறுபதுகளில் தில்லி ‘யாத்ரிக்’ குழு தயாரித்த எல்லா ஆங்கில நாடகங்களிலும் நடித்தவர். ஹபீபின் ஆரம்பகால நாடகங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். தில்லியின் மேல்மட்ட சொஸைட்டியில் ஒரு முக்கிய புள்ளி. நான் பணிபுரிந்த பிர்லா நிறுவனத்தின் ஏகபோக ட்ராவல் ஏஜெண்டான Saha & Rai Travels Ltd.கம்பெனி அதிபர் துருவ் சேட்டின் மனைவி. எங்கள் DBNS போடும் ஒவ்வொரு நாடகத்துக்கும் ஒருபக்க விளம்பரம் அவர் தந்தாகவேண்டும்.! பல கலாபூர்வமான நாடகங்களிலும் ஹிந்தி/ஆங்கில சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். இப்போது மும்பையில் செட்டிலாகி, ஹிந்திச்சானல் சீரியல்களில் கால் இஞ்ச் மேக்கப்புடன் ஒட்டியாணம் வங்கியுடனேயே தூங்கி, மடிப்புக்கலையாத பட்டு ஸாரியுடன் படுக்கையறையிலிருந்து வெளியே வரும் மிக முக்கியமான – Saas – மாமியார்களில் ஒருவர்!) அவர் எங்கள் இருவரையும் பார்த்து, ‘ஒருவர் பைப் பிடிப்பதைப் பார்ப்பதே அரிது. இங்கே மேதாவிகள் இருவர் சேர்ந்து பைப் பிடிக்கும் காட்சி அரிதிலும் அரிது!’ என்று சொல்லி சிரித்தார். அதற்கு நான், ‘நீங்கள் சொல்வதில் பாதி தான் உண்மை. இங்கே ஒரே ஒரு மேதாவி தான் இருக்கிறார்!’ என்று பதிலளித்தேன்.
நீங்களே சொல்லுங்கள், இருவர் சேர்ந்து பைப் பிடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே நடிகர் அசோக் குமார் கையில் பைப்புடன் வளைய வருவார். இங்கே திரையிலும் சிவாஜிக்குத்தான் அந்தப்பெருமை. அவர் இல்லாத நேரங்களில் ‘மேஜர்’ சுந்தர்ராஜனுக்கு பைப்பை கையிலேந்த உரிமையுண்டு. விக் வைத்துக்கொண்டு நடிக்கும் அப்பா வேடமானால் ரஜினி கையிலும் பைப் வைத்துக்கொள்ள டைரக்டர் அனுமதிப்பார்! ஆனால் யாருக்குமே காமிரா முன்னால் பைப்பை எப்படி பிடிப்பதென்று தெரியாது! நிஜவாழ்க்கையிலும் பைப் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதில் ஒருவரான ஹபீப் தன்வீரும் சமீபத்தில் மறைந்துவிட்டார். Pipe Smokers have become an endangered species. இவர்கள் காப்பாற்றப்படவேண்டியவர்கள். மத்திய அரசில் புதுப்பொறுப்பெடுத்திருக்கும் திரு. ஜெய்ராம் ரமேஷ் தான் அழிந்துவரும் இந்த இனத்தைக் காப்பாற்ற ஒரு வழி சொல்லவேண்டும். அன்புமணி ராமதாசிடம் போய்ப்பயனில்லை!
நான் சென்னை வந்தபிறகு அவருடன் தொடர்பேதும் இல்லை. நயா தியேட்டர் தொடங்கிய காலம் தொட்டே அவருடன் இருக்கும் நடிகர்கள் கோவிந்த் ராம், தேவிலால் இருவரையும் பெங்களூரில் யதேச்சையாக சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது சில தகவல்களை தெரிந்துகொண்டேன்.
2003-ல் போபால் போன தன்வீருக்கு அவரது நாடகமான போங்கா பண்டிட் அரங்கேறமுடியாமல், மத்தியப்பிரதேச அரசும் சங் பரிவாரும் நெருக்கடி ஏற்படுத்தின. 2004-ல் மத்தியப்பிரதேசத்தில் விதிஷா நகரில் இந்த நாடகத்தை மேடையேற்ற போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனாலும் இந்த நாடகத்தைப்பார்க்க தில்லியிலிருந்து வந்திருந்த தன் இரு நண்பர்களுக்காகவே, இரவு பத்துமணிக்கு மேல் வெற்று அரங்கில் இந்த நாடகத்தை நிகழ்த்திக்காட்டினாராம். நாடகம் பார்த்தவர்கள் அவரது இரு நண்பர்களும் அவர்களது காரோட்டிகளும் மட்டுமே! இவர் தான் ஹபீப் தன்வீர்!
தன்வீரை தங்கள் வழிகாட்டியாகவும், தெய்வமாகவும் ஆராதிக்கும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்திருக்கிறது. அஸ்கர் வஜாஹத் லாகூரைப்பற்றி சொன்னதை – லாகூருக்குப்பதிலாக ஹபீபாக மாற்றி – “எவனொருவன் ஹபீபை பார்க்கவில்லையோ, அவன் வாழ்க்கையே பாழ்!” என்று புகழ் பாடும் சீடர்கள் ஹபீப் தன்வீருக்கு இப்போதும் உண்டு!
—–00000——
‘உயிர்மை’ ஜூலை 2009-ல் வெளிவந்த கட்டுரை.

0 comments:

Post a Comment