Thursday, January 21, 2016

முந்தைய பதிவில் அம்மா உணவகத்தின் உணவு பற்றியும் சுத்தம் பற்றியும் எழுதியிருந்தேன். எனக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருந்தது. ஏழைகளுக்கு சென்று சேருவதை நாம் அபகரித்துக் கொள்கிறோமா?‘ என்ற கேள்வி இருந்தது. ‘நானும் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக இல்லாவிட்டாலும் மற்ற வகைகளில் தினசரி வரி செலுத்துகிறேன். அதனால் அரசு தரும் சலுகைகளில் எனக்கும் பங்குண்டு!’ என்று மனதைத்தேற்றிக்கொண்டு, சென்றவாரம் இரண்டு மூன்று முறை பொங்கல், இட்லி, சாத வகைகளை வரவழைத்து வீட்டில் சாப்பிட்டுப்பார்த்தேன்.

‘பார்சல் கிடையாதே!…எப்படி என்கிறீர்களா? ஒருமுறை வீட்டுக்குப்பக்கத்திலிருக்கும் அம்மா உணவகத்து மேலாளரை சந்தித்து, ‘அம்மா! உங்கள் உணவு வகைகளை எல்லோரும் சிலாகித்துப்பேசுகிறார்கள். நான் வயதானவன். தினமும் இங்கே வந்து சாப்பிட முடியாது. ஆளை அனுப்பினால் எனக்கு மட்டும் தேவையானதை கொடுத்தனுப்ப முடியுமா?’ என்று கேட்டதற்கு, ‘ஐயா! வயதானவர்களுக்கு எடுத்துப்போக அனுமதிக்கிறோம். யாராவது 20 இட்லி, 15 பொங்கல் கேட்டால் மட்டுமே அனுமதியில்லை! தட்டில் போட்டுக்கொடுத்துவிடுவோம். அதை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்!’ என்றார்.
முதல் நாள் ஒரு பொங்கலும், 2 இட்லியும் வரவழைத்தேன். மொத்தம் ஏழே ரூபாய் தான்! சாம்பார் மட்டும் அதை நம்பவில்லை! வீட்டிலேயே என் நாக்குக்கு வக்கணையாக நானே பண்ணிவிட்டேன். பொங்கல் நன்றாகவே இருந்தது. இன்னும் சுவையாக இருக்க என்ன செய்யலாமென்ற யோசனை வந்தது.
நேற்று வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நல்லமிளகு, மூன்று மேசைக்கரண்டி ஜீரகம், ஒரு கையளவு முந்திரிப்பருப்பு இவைகளை நெய்யில் பொன் போல வறுத்தெடுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக கரகரப்பாக அரைத்து வைத்து அதோடு இன்னொரு கைப்பிடி முந்திரிப்பருப்பை வறுத்து, அரைக்காமல் சேர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் வாங்கி வந்த பொங்கலுடன் இரண்டு தேக்கரண்டி மிளகு ஜீரகப்பொடி, இரு கரண்டி நல்ல நெய் இவைகளை கலக்கும்போதே வாசனை சாப்பிடு…..சாப்பிடு என்றது! சாம்பார் சட்னி எதுவுமில்லாமலே பரம திருப்தியோடு சாப்பிட்டு முடித்தேன். இட்லி சாப்பிட வயிறில்லை. மத்தியானம் தான் அதை முடிக்கவேண்டும்!
தினமும் காலையில் அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களுக்கு ஒரு டிப்ஸ் (ஒரு டிப்ஸ் என்பது தவறு!)
பேச்சிலராக இருந்தாலும் வீட்டில் நான் மேலே சொன்ன மிளகு ஜீரகப்பொடி, சின்ன நெய் பாட்டிலை உங்கள் பையில் எடுத்துச்செல்லுங்கள். சாப்பிடுமுன் இவைகளை கலந்து சாப்பிட்டுப்பாருங்கள்! வேறு எந்த “பவன்”களிலும் சுவைத்திராத பொங்கல் சாப்பிட்ட மணமான ஏப்பம் வரும்!…..

அதற்கு நான் கேரண்டீ!

0 comments:

Post a Comment