Wednesday, May 23, 2018

சந்திரா ஸ்வாமி!
இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.


நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக்கேட்கவைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார்.

                படத்தில் ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.


தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் "The Electric Moon" என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’. ‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில்ஊ ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி...எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்... ....ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம்.
அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! 
தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!
அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு -- எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!......நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”....இப்படி.....விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!

நான் காரில் ஏறி அமர்ந்தபோது,  அவர் “ட்ரைவர்! Gadi காடி லாவோ!” என்று சொன்னமாதிரி எனக்குப்பட்டது!

இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

--00ooo00--

0 comments:

Post a Comment