Monday, February 1, 2016


திரு.S.K.S. மணி என்று அறியப்பட்ட பாரதி மணி என்னுடைய நீண்ட நாள் நண்பர். டெல்லிவாழ் தமிழர்களுக்கு நன்கு பழக்கமானவர். அங்கே தமிழ் நாடகங்களை நாற்பது வருடங்களுக்கும் மேலாக வழங்கி வந்த D.B.N.S. தக்ஷிண பாரத நாடக சபா உருவானதில் மணியின் பங்கு மிகமிக முக்கியமானது. தில்லியில் இந்தக்குழுவில் தான் நானும் எனது கலை உலகுக்கு பிள்ளையார் சுழி போட்டேன். தில்லி நாடக உலகின் அச்சாணி இவர். திரு. பாரதி மணி நாடகத்தில் நடிப்பதிலும், கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், முக்கியமாக புது நாடகங்களை தேடிப்பிடித்து அரங்கேற்றம் செய்வதிலும் சமர்த்தர். திரு. இந்திரா பார்த்தசாரதியை ஒரு நாடகாசிரியராக தமிழுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரை மட்டுமே சாரும்.

கர்நாடக இசையில் நல்ல ஞானம். இவருடன் பழகாத இசைக்கலைஞர்களே யாரும் இருக்கமுடியாது. தில்லி கர்நாடக சங்கீத சபாவின் செயலராகவும் இருந்திருக்கிறார். இவரது திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழன் நான் தான். இவருடைய மாமனார் திரு. க.நா.சு. பிரபல எழுத்தாளர் விமர்சகர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதைப் போல பாரதி மணியும் தனது தில்லி அனுபவங்களை அழகாக, சுவைபட உயிர்மை பத்திரிகையில் எழுதி வருகிறார். நான் ஆவலுடன் தொடர்ந்து படித்துவருகிறேன்.

செய்கின்ற வேலையில் முழு ஈடுபாடு, சாமர்த்தியம், திறமை, ஆத்மார்த்தம் மிக்கவர் என் நண்பர். பொருள் மீதிருக்கும் ஆசையைவிட நாடகம், இசை, இலக்கியம் இவைகளின் மீது தணியாத ஆசை உண்டு. பாரதி மணியின் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் நான் உண்மையிலேயே  பெருமையடைகிறேன்...........

--நடிகர் டெல்லி கணேஷ்.


                  ****                    *****                                                  ****   

0 comments:

Post a Comment