Monday, February 1, 2016


கடந்த 1952-ம் வருடம் முதல் திரு. எஸ்.கே.எஸ். மணி அவர்களை நான் நன்கு அறிவேன். திரு. மணி முதன்முதலாக அவர் சொந்த ஊரான நாகர்கோவிலில் என்னை ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்தார். அந்த நட்பு அரை நூற்றாண்டுக்கும் மேலாக தில்லியில் வளர்ந்து இன்றுவரை தொடர்கிறது. நட்பை பேணி வளர்ப்பதில் சமர்த்தர்.
மணி கர்நாடக இசையின் பரம ரசிகர். என் இசைமீது அபார ஈடுபாடு உண்டு. என் தில்லி கச்சேரிகள் எல்லாவற்றிலும் அவரைப்பார்க்கமுடியும். தில்லி கர்நாடக சங்கீத சபா போன்ற பல அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால், அவருக்கு இசையுலகோடும் திரையுலகோடும் நல்ல தொடர்பு உண்டு. தில்லி போகும் எல்லா இசைக்கலைஞர்களுக்கும் எந்த உதவிகளையும் மறுக்காது உற்சாகத்துடன் செய்யத்தயாராக இருப்பவர்.
எனது வயலின் வேணு வீணா நிகழ்ச்சிகளில், என்னுடன் வாசித்த வீணை வெங்கட்ராமனுடன் திருவனந்தபுரம் பள்ளியில் ஒன்றாகப்படித்தவர். மணி நிறைய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னையில் என்னையும் பல முறை தான் நடித்த ஊருக்கு நூறு பேர், நண்பா....நண்பா போன்ற படங்களின் Preview-வுக்கு அழைத்து சென்றிருக்கிறார். நானும் படம் பார்த்துவிட்டு, அவர் நடிப்பைப் பாராட்டிய நினைவுகள் என்னுள் நிற்கின்றன.
இப்படி இசை, நாடகம், திரையுலகு, நட்பு என்றெல்லாம் பல பரிமாணங்கள் கொண்ட திரு. பாரதி மணி அவர்களின் இன்னொரு புது பரிமாணம் எழுத்து. சரளமான நடையும், நல்ல எழுத்தாற்றலும் கொண்ட திரு. மணி உயிர்மை பதிப்பகத்தின் மூலம், பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தன் நூலை வெளியிடும் இந்த நேரத்தில், அவரின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.........

-வயலின் வித்தகர் பத்மபூஷண் லால்குடி ஜி. ஜெயராமன்.

                      ****                            *****                     ****

0 comments:

Post a Comment