Thursday, October 5, 2017



நானே சொல்கிறேன்…..இது ஒரு மொண்ணையான கட்டுரை. நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும், வெண்ணையைக்கூட நாலைந்து தடவை மேலும் கீழும் அழுத்தி வெட்டினாலும் வெட்டாத மொண்ணைக்கத்தி மற்றும் Peeler பீலரைப்பற்றியது. நான் எழுதிய மொக்கைக்கட்டுரைகளில் இதற்கு முதலிடம் கிடைக்கும்!


டி.எம்.எஸ்ஸோ யாரோ பாடிய பாட்டு ரேடியோவில் வரும்: நல்ல மனைவி அமைவதெல்லாம்.....இறைவன் கொடுத்த வரம்!’....அவன் தயவில்லாமலே நல்ல மனைவி கூட அமைந்துவிடலாம். ஆனால் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் ஒரு நல்ல கத்தி அல்லது பீலர் கிடைப்பது அதைவிட துர்லபம்.


பார்வதிபுரம் கிராமத்தில், என் செறுப்பக் காலத்தில் சமையலுக்கு கத்திபீலர் எல்லாம் கிடையாது. என் முப்பாட்டிகள், பாட்டிகள், அம்மா காலத்தில் காய்கறிகளை தோலுரித்து, செப்பனிட்டு அடுப்பிலேற்ற சமையலறையில் கோலோச்சி இருந்தது அருவாமணை -- அரிவாள்மணை -- என்ற சாதனம் தான். எந்தக்காயாக இருந்தாலும், பிளக்க, வெட்ட, தோலுரிக்க, நறுக்க, சுரண்ட, பொடிதாக அரிய, அருவாமணையை விட்டால் வேறு இல்லை. ஒரு பலாப்பழத்தைக்கூட ஒரே போடில் இரண்டாகப்பிளந்துவிடலாம். (பலாப்பிசின் ஒட்டிக்கொண்டால் ஒருநிமிடம் அடுப்பில் காண்பித்து துணியால் துடைத்தால் போயே போயிந்தி!) கொல்லைப்புறத்திலிருந்து வாழையிலை அறுக்கவும் என் அம்மாவுக்கு அரிவாள்மணையே துணை! அருவாமணையில் தெரிந்தவர்கள் அறக்கீரை அரிந்தால், கீரை மத்துக்கு வேலையே இருக்காது! என் வீட்டில் இருந்த அரிவாள்மணை என் அம்மா கொண்டு வந்ததா ... இல்லை புக்ககத்திலேயே இருந்ததா என்பது தெரியாது. எத்தனை வருடங்களாக அது உபயோகத்தில் இருக்கிறதென்பதும் தெரியாது. சற்றே ஆராய்ந்தால் கீழடிக் கலாசாரத்துக்கே போகலாம்! கொஞ்சம் அசந்தால் கைவிரல்களை பதம் பார்த்துவிடும். என் சிறுவயதிலேயே பாந்தமாக அருவாமணையில் நறுக்குவது எனக்கு கைவந்துவிட்டது. 

எதைச்செய்தாலும் ஓரளவு பாந்தமாக செய்யவேண்டுமென்று நினைப்பவன் நான். காலையில் வரும் ஆங்கில தினசரியில் சிலநாட்கள் விளம்பரத்தோடு ஒருபக்கம் மட்டும் நாக்கைத்துருத்திக்கொண்டு வெளியே தலையை நீட்டும். அதை அழகாக மடித்து உள்ளே தள்ளியபிறகு தான் பேப்பரை திறப்பேன்.


நான் தில்லி போகும்போது மணைஅரிவாள்மணை - என்னோடு துணை வரவில்லை. அங்கே எல்லாமே கத்தி தான்! அறுபதுகளில் தில்லியில் நான் போட்ட ஒரு நாடகத்தில் (காவ்யராமாயணம்கே.எஸ். ஸ்ரீநிவாசன் எழுதிய சந்திஎன்ற நாடகம்) ஒரு முழு சீனும் நான் அரிவாள்மணையில் காய்கறி நறுக்கிக்கொண்டே பேசுவதாக காட்சி தொடரும். அந்த நாடகத்துக்கு விமர்சனம் எழுதிய வெங்கட் சாமிநாதன் ஒரு வாலிபன் இத்தனை பாந்தமாக அரிவாள்மணையை கையாள்வது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்! (ஒரு டிஸ்கி:: அப்போது எங்களிருவருக்கும் பரிச்சயமில்லை!) இன்னொரு காரணமும் இருக்கலாம். நான் ஒரு பீச்சாங்கையன் Left Hander. ராகுல் த்ராவிட் விளாசும் கவர் ட்ரைவை விட கங்கூலியின் ஸ்ட்ரோக் இன்னும் அழகல்லவா?


தமிழ்நாட்டிலும் மேடைச்சமையல் வந்ததிலிருந்து அரிவாள்மணைக்கு வேலையில்லாமல் போனது துரதிஷ்டம்! பழந்தமிழ்வாதிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் ஆயுதமான அரிவாள்மணையை மறுபடியும் புழக்கத்துக்கு கொண்டுவரவேண்டுமென்று ஏன் இன்னும் போராட்டம் தொடங்கவில்லை? புலியை முறத்தால் விரட்டியடித்த தமிழச்சி வீட்டில் அப்போதே அரிவாள்மணையும் இருந்ததென்று சரித்திர ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. அரிவாள்மணையின் இடத்தை கத்தி பிடிக்க விடலாமா? தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அரிவாள்மணையையும் தேர்தல் சின்னமாக விரைவில் அறிவிக்கவேண்டும். ......தொப்பி என்ன தொப்பி?


மாம்பழக்காலங்களில், அப்பா இருபது மாம்பழங்களை நன்றாக கழுவித்துடைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு உட்காருவார்...... அவரைச்சுற்றி நாங்களும். மடியிலிருந்து அவர் மனைவியைவிட அதிகமாக நேசித்த அவரது  Pen Knife பேனாக்கத்தியை எடுத்து விரித்து முதலில் காம்புப்பக்கத்தை சீவுவார். (இன்றைய தலைமுறைக்கு தெரியாத பேனாக்கத்திக்கு ஏன் இந்த பெயர் வந்தது? Fountain Pens காலத்துக்கு முந்தியிருந்த Squills இறகுப்பேனாவை கூர் செய்வதற்கு இந்தக்கத்தி பயன்பட்டது) பிறகு மாம்பழத்தின் மேல் ஒரே சீராக மேலிருந்து கீழ் சுற்றிச்சுற்றி அவரது கத்தி வழுக்கிக்கொண்டே போகும். கத்தி விடுபடும்போது அவர் கையில் மஞ்சள் நிறத்தில் அம்மணமான மாம்பழமும் கீழே குடை ஸ்ப்ரிங் மாதிரி நாங்கள் கையில் தூக்கித்தூக்கி விளையாடும் தோலும் விழும். மாம்பழத்தை உடனே நறுக்கமாட்டார். இருபது மாம்பழங்களுக்கும் ஒரே மாதிரி துச்சாதனன் பாணியில் வஸ்த்ராபகரணம் செய்வார். மாம்பழங்களும் ஹே....க்ருஷ்ணா!என்று அலறாது. அவனும் வரமாட்டான்! அப்பாவின் பேனாக்கத்திக்கு பயந்தோ என்னவோ! அவரது பேனாக்கத்தி  கடையில் வாங்கியது அல்ல...ஸ்பெஷலாக சொல்லிச்செய்தது. வெற்றிலைபாக்கு போடும் நண்பர்கள் பச்சைப்பாக்கு சீவ கேட்டாலும் கொடுக்கமாட்டார்.  அவர் அடிக்கடி சொல்வது:: “Like wife, pen and knife are not to be shared! துண்டாக நறுக்கிமுடிந்ததும் கொட்டையெல்லாம் எங்களுக்கு. கதுப்புக்களை வெட்டி, ஒவ்வொரு கிண்ணமாக இது பாட்டிக்கு, இது மாமாவுக்கு, இது அடுத்தாத்து அத்தைப்பாட்டிக்குஎன்று போகும். தாம்பாளத்தில் மீதமிருக்கும் துண்டுகளும் கொட்டைகளும் எங்களுக்கு சரிவிகிதத்தில் பிரிக்கப்பட்டாலும் அவனுக்கு நெறய குடுத்தே!பராதியை தவிர்க்கமுடியாது!


எங்கள் பார்வதிபுரம் கிராமக்கோவிலில் வருடத்திற்கு 14 நாட்கள் (பங்குனி உத்திரம், புரட்டாசி சனிக்கிழமை, அட்சய திருதியை, கிருஷ்ணஜெயந்தி போன்ற நாட்களில்) ஆயிரம்பேருக்கு மேல் அன்னதானம் ஸத்யைநடக்கும். தக்கலை, புலியூர்க்குறிச்சி, கணியாகுளம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம், ஒழுகிணசேரி, வேம்பனூர், சுசீந்திரம், மஹாதானபுரம், பூதப்பாண்டி, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அதற்கு முன்தினம் இரவு நடக்கும் காய்கறி வெட்டுபூஜையுடன் தொடங்கும். அதற்கு கிராமத்து மக்களை கலந்துகொள்ள வீடுதோறும் வந்து அழைப்பார்கள். வீட்டுப்பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மிகக்கூர்மையான கத்தியோடு அதில் கலந்துகொள்வார்கள். அப்போது ஹெட் குக் கோம்பை மணியன்என்னை தனியாக அழைத்து, ‘கிச்சாமணி, இவாள்ளாம் யானைத்தண்டிக்கு பெரிசு பெரிசா நறுக்குவா.  மத்த கூட்டு கறிக்கு பரவாயில்லை. அவியலுக்கு நறுக்கறவாளெ கொஞ்சம் கவனிச்சுக்கோ. கசாம்புசான்னு பெரிசும் சின்னதுமா வெட்டி வெச்சுரப்போறான்!என்று எச்சரிப்பார். அவியலுக்கு சேரும் காய்கறிகள் சதுரமாக இல்லாமல் ஒன்றரை இஞ்ச் அளவில் சீராக இருந்தால் தான் அவியல் பார்க்க அழகாக இருக்கும். அதனால் தான்”  வெட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவியல் காய்கறி நறுக்க  அனுமதி உண்டு! அதற்கு நான் மேற்பார்வையாளன்!


அரிவாள்மணை பற்றி தெரியாத இந்த இளைய சமூகத்துக்கு பழைய படம் இருந்தால் போடலாமேயென்று கூகிளாண்டவரை அணுகினேன். அதில்அருகாமனைஎன்று வருகிறது! முட்டாளே! கத்தியும் பீலரும் அருகாமனைகளில் அந்தக்காலத்தில் அரிவாள்மணை தான் கோலோச்சியது. எனக்கு அடுத்த தலைமுறைகளில் அரிவாள்மணையுடன் தேங்காய்த்துருவியையும் இணைத்து Two-in-One அர்த்தநாரீசுவரராக ஒரு அவதாரம் இருந்தது. என் வீட்டில் மாதொருபாகனாக இல்லாமல் இரண்டும் தனித்தனியாகவே இயங்கின.


எழுபதுகளில் தான் முதன்முறையாக Anjali Brand பீலர் மார்க்கெட்டுக்கு வந்தது. அதில் சிலது மழுங்காது நீடித்து உழைக்கும். அது தான் நான் மேலே சொன்ன இறைவன் கொடுத்த வரம்’.  இன்னும் சிலது முதல்முறையே தோலோடு சதையையும் கவ்விக்கொண்டுவரும். சரி....பீலர் என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன? கவிஞர் மகுடேசுவரனிடம் கேட்டால் தோலுருச்சிஎன்பார். எதற்கு வம்பு? பீலர் என்றே இருந்துவிட்டுப்போகட்டுமே! ஆனால் டிவி தொகுப்பாளினிகள் தான் அதை Beeler, Feeler, Bheeler என்றெல்லாம் உச்சரிக்கும் அபாயம் உண்டு!


அடிப்படையில் நான் நாடகநடிகனோ எழுத்தாளனோ அல்ல…… ஒரு சமையல் கலைஞன். நளன், பீமன் பரம்பரையில் வந்தவன். நன்றாக சமைக்கவும் பிடிக்கும்....சம்பிரமமாக சாப்பிடவும் பிடிக்கும். எனக்கு மொண்ணைக் கத்திகளைப் பார்த்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டுவரும். எனக்கென்று தனியாக வைத்திருக்கும் கத்திகள் மிகக்கூர்மையாக இருக்கும். என் மாமியார் ராஜி (திருமதி க.நா.சு.) ஐயோ...இது மணி கத்தி.....வேண்டாம்... தொட்டாலே வெட்டிரும்!என்பார்!  கொத்தவரங்காயோ பீன்ஸோ....நான் பேசிக்கொண்டே சக்..சக்சக்கென்று வேகமாக நறுக்குவதைப்பார்த்து என் மகள் அப்பா! ஜாக்ரதை!என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.  எனக்கொரு சந்தேகம் எப்போதுமுண்டு. ஏன் என்னைத்தவிர மற்றவர்கள் வீட்டில் மொண்ணைக்கத்திகளாகவே வைத்திருக்கிறார்கள்? நாலு பீன்சை வைத்து மொண்ணைக்கத்தியால் ஏழுதடவை மேலும் கீழும் இழுத்து பீன்ஸை துவம்சம் செய்பவர்களை பளார்என்று அறையவேண்டுமென்ற தணியாத ஆவல் எழும்! I am a born Chef!


பல ஆண்டுகளுக்குமுன்னால் மும்பை பம்பாயாக இருந்தபோது அங்கு என் நண்பன்வீட்டில் இரண்டுநாள் தங்கியிருந்தேன். எங்கே போனாலும் அன்றைய காய்கறி நறுக்கும் வேலையை கேட்டு வாங்கிவிடுவேன். நான் போகுமிடமெல்லாம் என்னோடு ஒரு கூர்மையான கத்தியும் பீலரும் உடனிருக்கும். நறுக்க பீன்ஸ் கொண்டுவைத்தார்கள். பச்சைப்பசேலென்று பிஞ்சு பீன்ஸ் கண்ணைப்பறித்தது. நறுக்கிவைத்தவுடன் எடுத்துப்போக நண்பன் மகள் வந்தாள். திடீரென்று அப்பா!....அம்மா!என்று கத்திக்கொண்டே பாத்திரத்துடன் உள்ளே ஓடினாள். என்னவென்று பார்த்தால்  பீன்ஸ் ஒரே சீராக நறுக்கியிருந்தது Emarald பச்சை மரகதப்பரல் போல் இருந்ததாம்!


நண்பர்கள் வீட்டுக்கு பார்க்கப்போகும்போது பழங்களுக்கு பதிலாக காய்கறிகள் வாங்கிக்கொண்டு போவேன். But it received mixed reaction! நான் போனபிறகு அந்தப்பையை பிரித்துப்பார்க்கும் சிலருக்கு காய்கறிகள் ஏமாற்றமாகவே இருந்தது.


வேலையில்லாமல் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பவனை, ‘நீ என்ன செய்கிறாய்!என்று கேட்டால் “I am peeling potatoes!" என்று பதில் சொல்வான். இந்த ஜோக் தமிழ்நாட்டில் அதிகமாக விலை போகவில்லை. நெருங்கிய நண்பர்கள் போனில் என்ன சார் பண்றீங்க?’ என்று கேட்பதற்கு பதிலாக 'I am peeling potatoes!' என்று சொன்னால் ஸார், இன்னிக்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டா சார்!என்ற பதில் கேள்வி! எங்கே போய் முட்டிக்க?


எழுபதுகளில் வேலை விஷயமாக அடிக்கடி ஐரோப்பிய மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த கிழக்கு ஐரோப்பிய தலைநகர்கள் புடாபெஸ்ட், புக்காரெஸ்ட், வார்ஸா, கிழக்கு பெர்லின் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எங்கே போனாலும் ஒருநாள் அந்த நகரத்தின் கறிகாய் மார்க்கெட்டுக்கு ஒரு விஸிட் நிச்சயம். இங்கே அப்போது பரிசயமில்லாத பல காய்கறிகளை அங்கே பார்த்து மகிழ்ந்ததுண்டு! வழக்கமான வெள்ளைநிற காலிப்ளவருடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு, ஊதா கலரிலும் அது அடுக்கிவைத்திருப்பதை பார்ப்பதே ஒரு ஆனந்தம். ஆனால் இப்போது அவையெல்லாமே நம்மூர் சமையலறைக்குள் புகுந்துவிட்டன! 

ஃப்ராங்க்ஃபர்ட்டில் DM 2/-க்கு ஒருடஜன் நல்ல கத்திகள் கிடைக்கும். மொத்தமாக வாங்கிவந்து, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கெல்லாம் --- தில்லானா மோகனாம்பாள் வைத்தி பார்த்தவருக்கெல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுப்பதுபோல் --- ஆளுக்கொரு கத்தி கொடுப்பேன். அதில் ஓரிருவர் மணி! ஆயுதம் யாருக்கும் இலவசமாக கொடுக்கக்கூடாது. இந்தா...இதை வெச்சுக்கோஎன்று பதிலுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அழுத்துவார்கள். National Automatic Rice Cooker இந்தியாவில் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நான் ஒன்று வாங்கிவந்தேன். ஹை! சாதம் வடிக்கவேண்டாமா?..... அதுவாவே Off ஆயிடறதுஎன்று அதிசயமாக அதைப்பார்க்கவந்த நண்பர் மனைவிமாரும் உண்டு!


அதிகவிலை கொடுத்து வெளிநாட்டில் வாங்கிய கத்தி தான் நீடித்து உழைக்கும் என்கிற தியரி முற்றிலும் பொய். Robert Welch, Le Creuset, Lakeland போன்ற கத்திகளையும் வாங்கி உபயோகித்திருக்கிறேன். அதிலொன்று வாங்கின மூன்றாம்நாளே டைனிங் டேபிள் கீழே விழுந்து பிடி வேறு, கத்தி வேறு என்றாகிவிட்டது. இந்த அழகில் ஆயுசுக்கும் சாணை தீட்டவேண்டாம் என்கிற கேரன்ட்டி வேறு. மாறாக Geep Batteries வாங்கும்போது இலவசமாகக்கிடைத்த சிவப்புப்பிடி போட்ட கத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக -- அதை தவறுதலாக காய்கறிக்குப்பையோடு வெளியே போடும்வரை -- உழைத்தது. அரசினர்பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவதாக வரவில்லையா...அதைப்போல!


என் தில்லி நண்பர் (தில்லி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)  H.K. SWAMY கிருஷ்ணஸ்வாமியை  (எங்களுக்கு கிச்சாமி) நீங்களும் திரையில் பார்த்திருக்கலாம். பாரதிபடத்தில் எனக்கு (சின்னசாமி அய்யருக்கு) நண்பராக வருவார். மனுஷன் சமையல்கலையில் ஒரு நளன். அவர் சமையலுக்கு காய்கறி வெட்டிவிட்டு மீதிக்குப்பையை Cutting Plate-ல் ஒரு Modern Art ஆக வடிவமைப்பார். காம்புகளை வைத்து குடுமி, வெண்டைக்காய்க்காம்பு கண்கள், வெள்ளரித்தோலால் புடவை இப்படி! அவரைப்பார்த்து நானும் கற்றுக்கொண்டேன்.  என் கறிகாய்க்குப்பையும் மாடர்ன் ஆர்ட்டாகத்தான் வெளியே போகும்! வெளிநாட்டில் சமையல் உபகரணங்கள் எது வாங்கினாலும், அவருக்கும் ஒன்று சேர்த்து வாங்குவேன்.  மாதமொருமுறை மணி, வர ஞாயித்துக்கிழமை சாப்பிட வரேன். சின்னவெங்காய சாம்பார், அவியல் பண்ணிடுஎன்பார். வரும்போது அவருடன் அவர் தயாரித்த தேங்காய்சாதம், லெமன் ரைஸ், புளியோதரை ஒருவண்டி வடாம் வற்றலும் வரும்! I am missing them all!


மாம்பழக்காலமாதலால், பெங்களூர் வந்தவுடனேயே ஒரு புது பீலர் வாங்கினேன். அது தோலோடு ஒருகொத்து சதையையும் சேர்த்துக்கொண்டுவந்தது. இரண்டுநாளில் இன்னொரு பீலர். அது மேலேயிருந்து கீழே வர மறுத்தது. இன்று மூன்றாவது. இது அதற்கு பிடித்த இடங்களில் மட்டும் திருப்பதி மொட்டைபோல தோலைச்சீவுகிறது. நான் என்ன செய்ய? சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட் விட்ட இந்தியாவில் ஒரு நல்ல பீலர் கிடைக்கவில்லையென்றால் நமது so called பொருளாதார முன்னேற்றம் எங்கே போகிறது?


தமிழ்நாட்டில் மட்டும் மோடி என்றும் பிற மாநிலங்களில் மோதிஎன்றும் அழைக்கப்படும் பிரதமர் அடுத்தமாத ‘Mann Ki Baat’ நிகழ்ச்சியில் என்னை சந்தித்தால், அவரிடம் நான் வைக்கும் ஒரே விண்ணப்பம் இது தான்:
உடனேயே DRDO (Defence Research & Development Organisation), ISRO, IIT, Kharagpur இவற்றிலிருந்து ஐந்து அங்கத்தினர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து, இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு குறைந்தபட்சம் இருவருடங்கள் நன்றாக உழைக்கும் கத்தி/பீலரின் Prototype ஒன்று தயார் செய்யவேண்டும். E-Tender மூலம் குறைந்தவிலைக்கு தயாரிக்க முற்படும் டெண்டர்தாரருக்கு இந்தியாவிலிருக்கும் ஒரு Defence Ordnance Factory-யில் பீலர்/கத்தி தயாரிப்பை ஆறு மாதத்துக்குள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும். அந்த விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதை தூர்தர்ஷன் தில்லி நேரலையில் ஒளிபரப்பும்.


அடுத்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுதும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆளுக்கொரு கத்தி/பீலர் இலவசமாக.....சாரி……. விலையில்லாப் பொருட்களாக ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படவேண்டும். ஒன்றுக்குமேல் வேண்டுமென்றால் எல்லாக்கடைகளிலும் கத்தி/பீலர் ரூ. ஒன்றுக்கு மான்யவிலையில் கிடைக்கும். ஆனால் இதற்கும் ஆதார் கார்டு அவசியம்.  ஜூலை முதல் அமுலுக்குவந்த GST-யிலிருந்து பீலருக்கும் கத்திக்கும் 0% வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

Swach Bharat திட்டத்தைப்போல இந்த திட்டத்தையும் எல்லா மத்திய அமைச்சரவைகளும் விளம்பரம் செய்து முன்னெடுத்துச்செல்லும். வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கவேண்டும்.
‘A GOOD PEELER SHAPES INDIA’………..MODI CUTTING INDIA TO SIZE!....... MAKE GOOD PEELER IN INDIA!........இது தான் நமது அடுத்த தாரகமந்திரம்!
என்ன சார் அநியாயம்?.....நாட்டிலே -– அஜீத் படம் ஊத்திக்கிட்டது, எடப்பாடி-தினகரன் மோதல், நீட் தேர்வு, ஓவியா பிக் பாஸிலிருந்து வெளியேற்றம்,  தலைநகரில் பச்சைக்கோவணத்தோடு விவசாயிகள் போராட்டம் --  போன்ற எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் மக்களை வாட்டும்போது நீங்க கத்தி கபடாவுக்காக இம்மாம் பெரிய கட்டுரை எழுதறீங்களே?....உங்களுக்கே நல்லாப்படுதா?’ என்று கேட்பவர்களுக்கு::


அனுபவிச்சவனுக்குத்தான் அந்த வலி தெரியும்....சார்!

0 comments:

Post a Comment